செய்திகள் சிந்தனைகள்
2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் மீண்டும் பூமிக்கு வந்தால் என்னவாகும்? - வெள்ளிச் சிந்தனை
2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் மீண்டும் பூமிக்கு வந்தால் என்னவாகும்?
வாகனங்கள், விமானங்கள், கைப்பேசிகளைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைவார் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.
மாறாக, நமது அன்றாட சிந்தனை முறையை பார்த்துதான் அவர் அதிர்ச்சி அடைவார்.
முந்தைய மக்கள் எளிய கேள்விகளுடன் தூக்கத்தில் இருந்து எழுந்தனர். அவை:
இன்று எனக்கு உணவு கிடைக்குமா? வேலை செய்வதற்கு வானிலை ஏற்றதாக இருக்குமா? இந்தப் பருவத்தில் அறுவடை நன்றாக இருக்குமா? அடுத்த குளிர்காலம் வரை நான் உயிர் பிழைப்பேனா?
இவ்வாறு.. அவர்களுடைய பெரும்பாலான சிந்தனைகள் உயிர் பிழைப்பதைப் பற்றியே இருந்தன.
ஆனால் வாழ்கால சமூகத்தில் முற்றிலும் மாறுபட்ட கேள்விகளுடன் மக்கள் துயில் எழுகின்றனர். அவை:
நேற்றிரவு என்ன அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன? எனது பணத்தை எப்படி முதலீடு செய்வது? எனது தொழில் இலக்குகளை அடைவேனா? எந்த கைப்பேசி, வாகனம், கல்லூரி சிறந்தது? தூங்கும்போது எத்தனை 'மெஸேஜ்கள்’ வந்தன? எத்தனை 'லைக்ஸ்’ கிடைத்தன? இன்று சமூக ஊடகத்தில் என்ன பதிவிட வேண்டும்?
அதாவது மக்களின் அன்றாடப் போராட்டம் இனி இயற்கையுடன் இல்லை. மாறாக நேரம், தகவல், தேர்வுகள், வேகமான முடிவுகள், உளவியல் அழுத்தங்கள் ஆகியவற்றுடன்தான் உள்ளன.
2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவருக்கு தெரிவுகள் குறைவாகவே இருந்தன. உடை, உணவு, வேலை ஆகியவை குறித்து மட்டுமே அவர் முடிவுகள் எடுத்திருப்பார்.
ஆனால் இன்று அருந்தும் காஃபி முதல் அணியும் ஆடை, உண்ணும் உணவு, பயன்படுத்தும் செயலி, பார்க்கும் ரீல்ஸ்கள் வரை தினமும் டஜன் கணக்கில் உடனடி முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனால் பெரும் மனச் சோர்வு ஏற்படுகிறது.
இதனை ’முடிவுச் சோர்வு’ (Decision Fatigue) என்று உளவியலாளர்கள் அழைக்கின்றனர். இதனால் காலப்போக்கில் முடிவெடுக்கும் திறன் குறைந்துபோகும்.
ஆயினும் இந்த மாற்றங்கள் அனைத்தையும் மீறி ஒரேயொரு விஷயம்தான் வியப்பளிக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருக்கும் இப்போது வாழ்பவருக்கும் அடிப்படை உணர்ச்சிகள் அப்படியேதான் இருக்கின்றன.
அன்பு, பயம், நம்பிக்கை, துரோகம், போட்டி, பொறாமை, சோகம், மகிழ்ச்சி ஆகியவற்றில் அனைவரும் சமமாக உள்ளனர்.
ஆக, மாறியிருப்பது மூளை அல்ல, சுற்றியுள்ள உலகம்தான்.
வாழ்க்கையை வசதி மிக்கதாக மாற்றுவது அல்ல நாகரிகம். மாறாக, வாழ்க்கையை எப்படி பயன் மிக்கதாக மாற்றுவேன்? வாழ்க்கைக்கு எப்படி அர்த்தம் கொடுப்பேன்? என்று சிந்திப்பதுதான் நாகரிகம்.
வரலாறு முழுவதும் மனிதகுலம் எதிர்கொண்ட அறிவுசார் சிந்தனை இதுதான்.
அல்லாஹ் கூறுகின்றான்: "ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல் புரிகின்றாரோ அவரை இவ்வுலகில் தூய (நிம்மதியான) வாழ்வு வாழச் செய்வோம்”. (16:97)
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
July 24, 2026, 9:25 am
உங்கள் ஒவ்வொரு அசைவும் இயந்திரங்களால் கண்காணிக்கப்படும்போது... வெள்ளிச்சிந்தனை
July 3, 2026, 8:22 am
வாசிப்பும் வழிபாடுதான்... - வெள்ளிச் சிந்தனை
June 26, 2026, 7:57 am
“கீழே இறக்கியே தீருவான்” - வெள்ளிச் சிந்தனை
June 19, 2026, 7:24 am
மூளையைப் பாதுகாக்க இறைவன் செய்துள்ள ஏற்பாடுகள் பற்றி தெரியுமா? - வெள்ளிச் சிந்தனை
June 12, 2026, 9:23 am
இயற்கை வளங்களை இறைவனின் படைப்பாகக் கருதுங்கள் - வெள்ளிச் சிந்தனை
May 30, 2026, 9:03 pm
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2026: புகையிலை ஒரு மெளன கொலையாளி
May 22, 2026, 9:01 am
