நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை

அப்பாஸிய்யாக்களின் ஆட்சியில் (ஹி. 132-656) மார்க்க அறிஞர்களுக்கு மாதாந்திர ஊதியமாக 100-500 தங்க தீனார் வழங்கப்பட்டது. 

அதனால் அக்காலத்தில் தந்தையர்கள் தங்கள் மகன்கள் அறிஞர்களாக ஆகவேண்டும் என்று கனவு கண்டனர்.

அப்பாஸிய சகாப்தம் அறிவையும் அறிஞர்களையும் கௌரவித்த உன்னதமான காலகட்டம்.

அப்பாஸிய ஆட்சியில் மார்க்க அறிஞர்களே நாகரிக வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களாக இருந்தனர். 

ஆயினும் அறிஞர்களுக்கு அந்த மதிப்பு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. 
தன் மகன் மார்க்க அறிஞராக வேண்டும் என்ற தந்தையின் கனவை நனவாக்குவது எளிதான காரியமாக இருக்கவில்லை.

கல்விப் பயணம் மிகவும் கடினமாக இருந்தது. அன்று ஒருவர் மார்க்க அறிஞராக மாற வேண்டும் என்றால்; முதலில் அப்பாஸிய நகரங்களுக்கு இடையே பயணம் செய்து, கலீஃபாக்களால் நிறுவப்பட்ட நூலகங்களை பார்வையிட வேண்டும். பின்னரே தனது பயணத்தைத் தொடங்க வேண்டும். 

இறுதியாக, அப்பாஸிய நாகரிகத்தின் இதயமாகவும் அறிவின் மையமாகவும் திகழ்ந்த பாக்தாத் நோக்கிச் செல்ல வேண்டும்.

அன்று ஒருவர் மார்க்க அறிஞராகக் கருதப்பட வேண்டுமெனில்; அவர் மருத்துவம், கணிதம், வானியல், உயிரியல், புவியியல் மற்றும் வரலாறு என பன்முகத் துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பின்னர் அவர் அறிஞர்களின் சிறப்பு வாய்ந்த குழுக்களின் முன் தமது திறமையை நிரூபிக்க வேண்டும். பின்னரே அவர் அறிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்படுவார்.

கலீஃபா ஜஃபர் அல்முக்ததிரின் ஆட்சிக்காலத்தில், பேரரசு முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் ஒன்பதாயிரம் மருத்துவ அறிஞர்கள் மருத்துவ உரிமத் தேர்வுகளை எழுதுவதற்காக பாக்தாத் நகருக்கு பயணம் செய்தனர். 

அப்பாஸியப் பேரரசு அறிஞர்களின் அறிவுசார் வெளியீடுகளைக் கடுமையாக ஆய்வு செய்தது. எழுதப்பட்ட நூல்கள் நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டன.

மேலும் அவற்றின் ஆசிரியர்களுக்கு அவர்களின் ஆண்டுச் சம்பளத்துடன், அவர்களின் எழுத்துக்களின் எடைக்குச் சமமான தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. 

பின்னர் பேரரசு முழுவதும் நூல்களை நகலெடுத்து விநியோகிக்கும் பணியை அரசு மேற்கொண்டது.

இதனால்தான் அப்பாஸிய சகாப்தம் அறிவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

ஆதாரம்: (அல்முகத்திமா - இப்னு கல்துன்)

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset