நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை

வயதாக வயதாக இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் நிகழ்வுகள்தான் என்பதையும், அந்த நிகழ்வுகளுக்கு உள்ளேயே நாம் வாழ்கிறோம் என்பதையும் எப்போதேனும் உணர்ந்ததுண்டா? நினைத்துப் பார்த்தால் சிலபோது அனைத்தும் கதைகள் போன்று தோன்றுகின்றன.

நம்மைக் குறித்து அடுத்தவரிடம் சொல்லும்போது ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கும்.

நம்முடைய குழந்தைப் பருவத்தைப் பற்றி நினைக்கும்போது ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. உடனே அதை கதை போன்று சொல்கிறோம்.

இன்று நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதை விளக்கும்போது ஒரு கதை சொல்கிறோம்.

நம் வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது மீண்டும் ஒரு கதை சொல்கிறோம்.

ஒருவேளை இதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக இருக்குமோ? அனைவருக்கும் கடந்த காலம் ஒன்றுதான். ஆனால் அந்த கடந்த காலத்தைக் குறித்து அனைவரிடத்திலும் முற்றிலும் மாறுபட்ட கதைகள் உள்ளன.

ஒருவர் தோல்வியைப் பற்றிச் சொல்கிறார். இன்னொருவர் புதிய தொடக்கத்தைப் பற்றிச் சொல்கிறார்.

மற்றொருவர் காயத்தை மட்டுமே காண்கிறார். மற்றொருவர் பயணத்தின் தொடக்கத்தைக் காண்கிறார்.

மட்டுமல்ல, ஒரே நிகழ்வை வெவ்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு வடிவங்களில் சொல்ல முடியும் என்பதையும் அப்போதுதான் நாம் உணர்கிறோம்.

கதைகள் கடந்த காலத்தை மாற்றுவதில்லைதான். ஆனால் சொல்லவேண்டிய முறையில் சொன்னால்; சொல்லும் நபரையும் கேட்கும் நபரையும் மாற்றும் அபார ஆற்றல் கதைகளுக்கு உண்டு.

அதனால்தான் நபிகளாரின் உபதேசங்கள் வார்த்தைகளாக மட்டும் இல்லாமல், கடந்தகால மக்களின் நிகழ்வுகளாகவும் இருந்தன.

ஒருமுறை தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு ஏதேனும் கதை சொல்லுங்கள்” என்று கேட்டனர். அதற்கு நபிகளார், "எனக்குத் தெரியாதே”என்றார்கள்.

உடனே அல்லாஹ், "உங்களுக்குத் தெரியாவிட்டால் என்ன? நாம் கதை சொல்கிறோம்” என்றவாறு இறக்கியதுதான் யூஸுஃப் அத்தியாயம். 

அந்த வரலாற்றை அல்லாஹ் இப்படித் தொடங்குகிறான்:

"(நபியே!) நாம் இந்தக் குர்ஆனை உமக்கு வஹி மூலம் அருளி, சரித்திரங்களையும் மிக அழகிய முறையில் உமக்கு விவரிக்கின்றோம்” (12:3)

- நூஹ் மஹ்ழரி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset