நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்கேசோவின் 24 மணி நேரப் பாதுகாப்பு பங்களிப்பு உள்ளூர் தொழிலாளர்களுக்கு இனி கட்டாயமில்லை; அந்நியத் தொழிலாளர்களுக்கு கட்டாயமாகத் தொடரும்: டத்தோஶ்ரீ ரமணன்

புத்ராஜெயா:

பெர்கேசோவின் கீழ் இயங்கும் பேரிடரல்லாத தொழில் விபத்துத் திட்டத்திற்கான 24 மணி நேரப் பாதுகாப்பு பங்களிப்புகள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு இனி கட்டாயமில்லை.

மாறாக அவை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன.

இருப்பினும் அந்நியத் தொழிலாளர்களுக்கான 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டத்திற்கான பங்களிப்புகள் கட்டாயமாகத் தொடரும்.

தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு இணங்க அவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ஆர். ரமணன் கூறினார்.

LINDUNG 24 Jam எனும் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டத்திற்கான பங்களிப்புகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இனி கட்டாயமில்லை என்று அமைச்சரவை நேற்று முடிவு செய்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் பங்களிப்பதா வேண்டாமா என்பதை உள்ளூர் தொழிலாளர்கள் தங்களின் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ப தேர்வு செய்ய இந்த முடிவு வாய்ப்பளிக்கிறது.

உள்ளூர் தொழிலாளர்களுக்கான செயல்படுத்தும் முறை மற்றும் தன்னார்வப் பங்கேற்பு செயல்முறை ஆகியவை பெர்கேசோவில் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

உள்ளூர் தொழிலாளர்களுக்கு இதன் அமலாக்கம் தற்போது விருப்பத்தின் பேரில் இருந்தாலும், 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் என்பது, வேலை நேரத்திற்குப் பிறகும், பணியிடத்திலும், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதும் ஏற்படும் விபத்துகளின்போது தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் ஒரு முக்கியமான முன்முயற்சியாகும் என்றார்.

சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மக்கள் சிறந்த முடிவுகளை எடுக்க ஏதுவாக, இத்திட்டத்தின் பலன்கள் பற்றிய தெளிவான மற்றும் துல்லியமான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்வதற்கும் பெர்கேசோ தனது முயற்சிகளைத் தொடர்ந்து வலுப்படுத்தும்.

குறிப்பாக  மனிதவள அமைச்சு இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்திட்டத்தின் அமலாக்க வழிமுறையை மறுஆய்வு செய்யும் என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset