நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பான்–பிலிப்பைன்ஸ் கடல்சார் பேச்சுவார்த்தைக்குச் சீனா கடும் எச்சரிக்கை: பிராந்திய பதற்றம் மேலும் தீவிரம்

பெய்ஜிங்: 

ஜப்பான், பிலிப்பைன்ஸ் இடையே நடைபெறவுள்ள கடல்சார் எல்லை வரையறை பேச்சுவார்த்தை தொடர்பாக, சீனா கடுமையான சட்டப்பூர்வ எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை, தென் சீனக் கடல், தைவானைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

சீனாவின் இயற்கை வள அமைச்சகம் வெளியிட்டுள்ள சட்டக் கருத்தின்படி, பெய்ஜிங்குடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும், ஜப்பான், பிலிப்பைன்ஸ் முதலில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தச் சட்டக் கருத்தை, அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சீன கடல்சார் விவகாரங்கள் நிறுவனம் தயாரித்துள்ளது. அதில், சீனாவின் ஒப்புதல் இன்றி தொடங்கப்பட்டுள்ள இந்தப் பேச்சுவார்த்தை சட்டரீதியாக செல்லுபடியாகாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு அளிப்பதோ அல்லது அதனை அங்கீகரிப்பதோ அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வெளிநாட்டு சக்திகள் இதில் தலையிட வேண்டாம் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

தைவானின் கிழக்குப் பகுதியில் உள்ள கடல் எல்லைகள் தொடர்பாக டோக்கியோவும் மணிலாவும் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் சீனா தனது கடலோரக் காவல் கப்பல்கள், கடலடிப் பகுதியை ஆய்வு செய்யும் ஆராய்ச்சிக் கப்பல்களை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருப்பதால், அந்தக் கடற்பரப்பில் பிரத்தியேக பொருளாதார மண்டலம் (EEZ), கண்டத் திட்டுப் பகுதி மீதான உரிமை சீனாவுக்கே சொந்தமானது என்று பெய்ஜிங் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எனினும், தைவான் அரசு, தைவான் நடைமுறையில் சுயாட்சி கொண்ட தனித்த அரசியல் அமைப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறி, சீனாவின் உரிமைக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

ஜப்பான்–பிலிப்பைன்ஸ் இடையேயான இந்த முயற்சி, தைவானும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள தீவுகளும் சீனாவின் பகுதிகள் என்ற பெய்ஜிங்கின் நிலைப்பாட்டை முற்றிலும் புறக்கணிப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
அத்துடன், இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட ஒப்பந்தம் (UNCLOS), சீனாவின் இறையாண்மை உரிமைகளை மீறுவதாகவும் அந்தச் சட்டக் கருத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீப மாதங்களில், தைவான் தொடர்பான எந்தவொரு மோதலும் ஏற்பட்டால் அதில் தங்கள் நாடுகள் பங்கேற்கக்கூடும் என ஜப்பான், பிலிப்பைன்ஸ் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இந்தக் கருத்துகள் பெய்ஜிங்கின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளன.

இதற்கிடையில், கடந்த மே மாதம் இரு நாடுகளும் தங்களது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பாதுகாப்பு, இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset