நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐ.நா. தலைமையகத்திற்கு வெளியே தீக்குளித்த நபர் உயிரிழப்பு

நியூயார்க்:

அமெரிக்காவின் ஐக்கிய நாட்டு சபையின் தலைமையகத்திற்கு வெளியே ஆடவர் ஒருவர் தன்னை தீக்கிரையாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயமடைந்த அந்த நபர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நியூயார்க் காவல் துறை (NYPD) தெரிவித்துள்ளது.

NYPD வெளியிட்ட தகவலின்படி, வியாழக்கிழமை மாலை 6.32 மணியளவில் பர்ஸ்ட் அவென்யூ, 42-ஆவது தெரு சந்திப்பில் ஒருவர் தன்னைத் தீக்குளித்துக் கொண்டதாக அவசர அழைப்பு கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் அவரை உடனடியாக பெல்லெவ்யூ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

"பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன," என்று NYPD தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கான காரணம் அல்லது நோக்கம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், நியூயார்க் போஸ்ட் நாளிதழ், சம்பவம் நிகழ்ந்தபோது அந்த நபர் திபெத் கொடியை ஏந்தியிருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், அந்தத் தகவலை AFP சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, இதுவரை ஐக்கிய நாடுகள் சபை எந்த அதிகாரப்பூர்வ பதிலையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset