நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

‘கழிவு அல்ல, வளம்’: தினமும் 39,000 டன்களுக்கும் மேற்பட்ட திடக்கழிவுகளை உருவாக்கும் மலேசியா

கோலாலம்பூர்: 

மலேசியாவில் தினமும் 39,000 டன்களுக்கும் அதிகமான திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.

இதில் பெரும்பாலான கழிவுகள் குப்பை மேடுகளில் கொட்டப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவலை வீடமைப்பு, உள்ளூராட்சி அமைச்சு (KPKT) வெளியிட்டுள்ளது.

அமைச்சின் நகர்ப்புற நிலைத்தன்மைப் பிரிவு செயலாளர் ரிசாவதி அப்துல் காதிர், பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, உலோகம் போன்ற கழிவுகளை முறையாகப் பிரித்தால், அவற்றில் பெரும்பாலானவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் பொருளாதார வளங்களாக மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

“கழிவுகள் வெறும் குப்பை அல்ல; அவை மீட்டெடுக்கக்கூடிய மதிப்புமிக்க வளங்கள். அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும்,” என அவர் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, 2026 தேசிய மறுசுழற்சி இயக்கத்தை (KKSK 2026) அமைச்சு முன்னெடுத்து வருகிறது. இம்முயற்சி மூலம் வீட்டு மட்டத்திலிருந்தே கழிவுகளைப் பிரித்து நிர்வகிக்கும் கலாசாரத்தை மக்களிடையே உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் மறுசுழற்சி பங்களிப்பை அதிகரிக்க, நாடு முழுவதும் முக்கிய இடங்களில் கூடுதல் மறுசுழற்சி சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதோடு, வணிக வளாகங்களில் மறுசுழற்சி மையங்களை அமைப்பதை உரிமம் வழங்கும் நிபந்தனைகளில் ஒன்றாக மாற்ற அரசாங்கம் கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது.

“ஷாப்பிங் செய்யும் போதே மறுசுழற்சியையும் முடித்துவிடலாம்” என்ற புதிய அணுகுமுறையின் கீழ், மக்கள் வணிக வளாகங்களுக்கு வருகை தரும் போதே தங்களது மறுசுழற்சி பொருட்களை ஒப்படைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், நிலையான வளர்ச்சியையும் வலுப்படுத்தும் நோக்கில், ஜூன் 24-ஆம் தேதி லாலாபோர்ட் புக்கிட் பிந்தாங் வளாகத்தில் நடைபெறும் KKSK 2026 தொடக்க விழாவில் பங்கேற்று இந்த தேசிய முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset