நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 உயிருள்ள பெங்கோலின்கள், யானைத் தந்தம் பறிமுதல்: சபா சோதனையில் பிலிப்பினோ ஆடவர் கைது

கினபாத்தாங்கான்: 

சபாவில் நடைபெற்ற அதிரடி ஒப் பெர்சேபாடு கசானா (Op Bersepadu Khazanah) நடவடிக்கையில், 10 உயிருள்ள பெங்கோலின்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய பிலிப்பினோ ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்போங் பாரிஸ் 3 பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில், சபா வனவிலங்கு துறை (SWD), பொது நடவடிக்கைப் படை (GOF) 15-வது பட்டாலியன் இணைந்து மேற்கொண்ட சோதனையில், அவர் தி யங் பிளாண்டேஷன் நுழைவாயிலில் கைது செய்யப்பட்டார்.

சோதனையின் போது, அதிகாரிகள் சுமார் 9 கிலோகிராம் பெங்கோலின் செதில்கள் அடங்கிய இரண்டு பிளாஸ்டிக் பொதிகளையும், யானையின் தந்தம் என நம்பப்படும் ஒரு துண்டையும் பறிமுதல் செய்தனர். இது சட்டவிரோத வனவிலங்கு வேட்டையின் பெரிய வலையமைப்பை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வகையில் அமைந்துள்ளது.

சபா வனவிலங்கு துறை இயக்குநர் முஹம்மத் சோஃபியான் அபு பக்கர், பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 “அனைத்து வனவிலங்கு மாதிரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1997 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.”

“சபாவின் அரிய உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்க, பிற அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து சட்டவிரோத வேட்டையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

1997 சபா வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இத்தகைய குற்றங்களுக்கு 250,000 ரிங்கிட் வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதனிடையே, வனவிலங்கு தொடர்பான குற்றங்களை உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset