நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹோர்முஸ் நீரிணை பயணத்திற்குப் புதிய கட்டுப்பாடுகள்: ஈரானின் அதிரடி நடைமுறைகள் அறிவிப்பு

இஸ்தான்புல்: 

உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்காக ஈரான் புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது.

தெஹ்ரான்–வாஷிங்டன் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் பாரசீக வளைகுடா ஜலசந்தி ஆணையம் (PGSA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒப்பந்தம் அமலில் இருக்கும் காலப்பகுதியில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க விரும்பும் அனைத்து கப்பல்களும், அதிகாரப்பூர்வ வழிமுறைகள் மூலம் முன்கூட்டியே அனுமதி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஜலசந்தியை அடைவதற்கு குறைந்தது 48 மணி நேரங்களுக்கு முன்னதாக முழுமையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கப்பல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமதங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பான கடல்சார் இயக்கத்தை உறுதிப்படுத்தவும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக PGSA தெரிவித்துள்ளது.

அதோடு, பாதுகாப்பு, கடற்பயண பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சேவைகளுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்கள் 60 நாட்களுக்கு விலக்கப்படும் என்றும், அதற்கான செலவுகளை ஈரான் அரசாங்கமே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் சுரங்கங்கள், பிற பாதுகாப்பு அபாயங்கள் காணப்படும் பகுதிகள் இருப்பதால், கப்பல்கள் நிர்ணயிக்கப்பட்ட பாதைகள்,  பயண நேர அட்டவணைகளை முன்கூட்டியே ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் அண்மையில் 14 அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஈரானின் அணுசக்தித் திட்டம், சர்வதேசத் தடைகள் தொடர்பாக இருநாடுகளும் 60 நாள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஹோர்முஸ்நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதற்கும், அதற்குப் பதிலாக அமெரிக்கா தனது கடல்சார் தடைகளைத் தளர்த்துவதற்கும் வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset