நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாணவர் எழுச்சியால் பரபரக்கும் ஜகார்த்தா: 4,576 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்

ஜகார்த்தா: 

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் மாணவர் அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் (NGO) முன்னெடுக்கவுள்ள தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னிட்டு, 4,576 பாதுகாப்புப் படையினரை அதிகாரிகள் களமிறக்கியுள்ளனர்.

ஜகார்த்தா காவல்துறை பேச்சாளர் இன்ஸ்பெக்டர் எர்லின் சுமந்திரி, பெருநகர காவல்துறை, மாவட்ட காவல் பிரிவுகள், உள்ளூர் காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு, ஒழுங்கு, அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என அவர் கூறினார்.

தேசிய நினைவுச் சின்னம் (MONAS), காம்பிர் பகுதி, மக்கள் பிரதிநிதிகள் சபை (DPR) வளாகம், பல முக்கிய அரசாங்க அலுவலகங்கள் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர் கூட்டணிகள், சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டங்கள் காலை முதல் பிற்பகல் வரை நடைபெறவுள்ளன.

சமீப வாரங்களாக மானியம் இல்லாத எரிபொருள் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு, ஊழல் ஒழிப்பில் தீவிர நடவடிக்கை கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, போராட்டங்களில் பங்கேற்கும் அனைவரும் சட்டம், ஒழுங்கை மதித்து அமைதியான முறையில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இராணுவப் படையினர் களமிறக்கப்பட்டிருப்பது தொடர்பாக விளக்கமளித்த இந்தோனேசிய தேசிய இராணுவத்தின் (TNI) பேச்சாளர் முஹம்மதழ நாஸ், காவல்துறையின் கோரிக்கையின் பேரிலேயே அவர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“போராட்டக்காரர்களை நேரடியாகக் கையாள இராணுவம் பயன்படுத்தப்படாது. அவசர சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே காவல்துறைக்கு துணைபுரியும் வகையில் செயல்படும்,” என அவர் விளக்கமளித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset