நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீற்றம் காட்டிய செமெரு எரிமலை: 4.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்த கொதிநிலை மேகங்கள்

லுமாஜாங்: 

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள செமெரு எரிமலை வெள்ளிக்கிழமை காலை திடீரென சீற்றம் காட்டி வெடித்ததைத் தொடர்ந்து, கொதிநிலை வெப்ப மேகங்கள் சுமார் 4.5 கிலோமீட்டர் தூரம் வரை பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

எரிமலை கண்காணிப்பு அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, காலை 7.21 மணியளவில் ஏற்பட்ட வெடிப்பின்போது, சாம்பல் புகைத் தூண் உச்சியிலிருந்து சுமார் 1,000 மீட்டர் உயரம் வரை எழுந்தது. அதேவேளை, கொதிநிலை மேகங்கள் கோபோகான் ஆற்றுப் பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாவா தீவின் மிக உயரமான எரிமலையாக விளங்கும் செமெரு, ஒரே நாளில் ஆறு முறை வெடிப்பை பதிவு செய்துள்ளதாக கண்காணிப்பு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதையடுத்து, எரிமலையின் அபாய நிலை மூன்றாம் கட்ட எச்சரிக்கை (Level III – Siaga) நிலையில் தொடர்வதாக இந்தோனேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெடிப்பு மையத்திலிருந்து 13 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் உள்ள கோபோகான் ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்ப மேகங்கள், எரிமலைக் குழம்பு வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக ஆற்றங்கரையோர பகுதிகளிலும் மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செமெரு எரிமலையின் செயல்பாடுகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset