செய்திகள் மலேசியா
டீசல் உதவித் தொகை 30% முதல் 70% வரை குறைக்கப்பட்டதால் லோஜிஸ்டிக்ஸ் துறையில் உள்ள லோரி உரிமையாளர்கள் பெரும் பாதிப்பு: ஜோஸ்வா ரவி
புத்ராஜெயா:
டீசல் உதவித் தொகை 30% முதல் 70% வரை குறைக்கப்பட்டதால் லோஜிஸ்டிக்ஸ் துறையில் உள்ள லோரி உரிமையாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.
தீபகற்ப மலேசிய லோஜிஸ்டிக்ஸ் தொழில்முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜோஸ்வா ரவி இதனை கூறினார்.
புத்ராஜெயாவில் உள்ள உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கை செலவினத் துறை அமைச்சில் இவ்விவகாரம் குறித்து மகஜர் வழங்கப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது.
டீசல் மானியக் கட்டுப்பாட்டு அமைப்பு கீழ் வணிக வாகனங்களுக்கு வழங்கப்படும் டீசல் ஒதுக்கீடு 30 முதல் 70 சதவீதம் வரை திடீரென குறைக்கப்பட்டது.
இந்த பிரச்சினையை முன்வைத்து கடந்த ஜூன் 8ஆம் தேதி அமைச்சுக்கு மின்னஞ்சல் மூலம் சந்திப்பு கோரிக்கை விடுத்திருந்தாலும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதனால் இன்று நேரடியாக மகஜர் அளிக்க வந்தோம்.
லோஜிஸ்டிக்ஸ் துறையில் டீசல் முக்கிய செலவாக இருப்பதால், ஏற்கெனவே போதாமையாக இருந்த ஒதுக்கீடு மேலும் குறைக்கப்பட்டிருப்பது நிறுவனங்களின் தினசரி செயல்பாடுகளை பாதித்துள்ளது.
இதன் விளைவாக கட்டுமானம், உணவு உற்பத்தி, பொது பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல துறைகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
பொருட்கள் விநியோகத்தில் தாமதம் அல்லது செலவு அதிகரிப்பு ஏற்பட்டால் அதன் சுமை இறுதியில் பொதுமக்கள் மீதே விழும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
துறையைப் பற்றிய தவறான புரிதல்
அனைத்து லோரி நிறுவனங்களுக்கும் போதுமான மானிய டீசல் வழங்கப்படுகிறது என்ற பொதுவான நம்பிக்கை முற்றிலும் தவறானது.
1 டன் லோரி ஒரு பயணத்திற்கு சுமார் 120 லிட்டர் பயன்படுத்தும் நிலையில், மாதத்திற்கு வழங்கப்படும் 1,200 லிட்டர் டீசல் 10 பயணங்களுக்கு மட்டுமே போதுகிறது.
அதேபோல் 10 டன் லோரிக்கு மாத ஒதுக்கீடு 5 முதல் 8 பயணங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
மேல்முறையீட்டு காலம் குறித்து கேள்வி
ஒதுக்கீட்டை அதிகரிக்க மேல்முறையீடு செய்யலாம் என அமைச்சு அறிவித்திருந்தாலும், அந்த விண்ணப்பம் எவ்வளவு நேரத்தில் அங்கீகரிக்கப்படும் என்பது தெளிவில்லை என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.
ஒரு லோரியின் ஒதுக்கீடு 1 முதல் 2 வாரங்களில் முடிவடையும் நிலையில், மேல்முறையீடு தாமதமானால் தொழில்முறை நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
செயல்பாடு நிறுத்தப்படும் அபாயம்
டீசல் ஒதுக்கீடு முடிவடைந்தால், அதிக விலை கொண்ட வர்த்தக டீசலை பயன்படுத்த இயலாமல் பல லரோரி நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகும்.
இது நாட்டின் பொருட்கள் விநியோக சங்கிலியை முழுமையாக பாதிக்கும் என அவர் எச்சரித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 5:01 pm
ஜூலை 1 முதல் அனைத்து ஏடிஎம்களிலும் பணம் எடுப்பதற்கு 1 ரிங்கிட் கட்டணம் இல்லை
June 15, 2026, 4:30 pm
புக்கிட் ஜாலிலில் ஆடம்பர குடியிருப்பில் இயங்கிய மினி காசினோ முறியடிப்பு: 15 பேர் கைது
June 15, 2026, 3:45 pm
