செய்திகள் இந்தியா
ஜோர்ஹாட்டில் இந்திய இராணுவ விமானம் விபத்து: தரையிறங்கும் தருணத்தில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்
புதுடெல்லி:
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ரஷ்ய தயாரிப்பு Antonov An-32 இராணுவ சரக்கு விமானம், அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் விமானப்படை நிலையத்தில் தரையிறங்கும் முயற்சியின் போது சனிக்கிழமை விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையின்படி, இரட்டை எஞ்சின் கொண்ட Antonov An-32 விமானம் தரையிறங்கிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விபத்தில் சிக்கியது.
இதுவரை உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேவேளை, சம்பவம் நிகழ்ந்தபோது விமானத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்பதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
“விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது,” என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இதனிடையே, NDTV வெளியிட்ட காட்சிகளில் விபத்து நடந்த பகுதியிலிருந்து அடர்த்தியான கரும்புகை வானை நோக்கி எழுவதும், விமானத்தின் பாகங்கள் சிதறிக்கிடப்பதும் பதிவாகியுள்ளது.
உயரமான மலைப்பாங்கான பகுதிகளிலும் கடுமையான வானிலைச் சூழல்களிலும் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட Antonov An-32 விமானங்கள், இந்திய விமானப்படையில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இராணுவ தளவாடப் பொருட்கள் விநியோகம், தொலைதூர பகுதிகளில் மனிதாபிமான உதவிப் பணிகளுக்காக சுமார் 100 விமானங்கள் தற்போது சேவையில் உள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், இதே வகை An-32 விமானம் தொடர்பான கடைசி பெரிய விபத்து 2019-ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில், சீன எல்லைக்கு அருகே நிகழ்ந்தது. அந்தச் சோக விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
தற்போது விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தொழில்நுட்பக் கோளாறா, வானிலைச் சிக்கலா அல்லது வேறு காரணமா என்பது குறித்த உண்மை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய இராணுவ விமானங்களில் ஒன்றான An-32 விபத்துக்குள்ளான இந்தச் சம்பவம், பாதுகாப்பு, விமானப் பராமரிப்பு தொடர்பான கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 13, 2026, 7:41 pm
நிபா வைரஸ் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல்
June 9, 2026, 9:37 am
இந்திய அரசின் எஃகு ஆலையில் பயங்கர வெடிப்பு: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
June 8, 2026, 1:31 pm
மத்திய பிரதேசத்தில் ரூ.80,000 ஊதியம் பெற்று வந்துள்ள 14 போலி மருத்துவர்கள்
June 4, 2026, 10:07 pm
பிஹார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
June 4, 2026, 12:55 pm
பாரம்பரியத்தை உடைத்து சவுதிக்கான இந்தியத் தூதராக முஸ்லிம் அல்லாதவரை நியமித்தது ஒன்றிய அரசு
June 3, 2026, 3:50 pm
