நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி: எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி

கொல்கொத்தா:

மேற்கு வங்கத்தில் சமையல் எரிவாயு மானியம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்ப்பதற்காக வங்கிக்கு சென்ற பெண்ணின் கணக்கில் ரூ. 100 கோடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேற்கு வங்கம், தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் கூரை வீட்டில் வசிக்கும் கூலித் தொழிலாளி ஷேக் என்பவரின் மனைவி காஷ்மிரா. இவர், குடும்பச் செலவுகளுக்கு தனது கணவருக்கு உதவும் வகையில், ஜரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவர், சமையல் எரிவாயு மானியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை சரிபார்ப்பதற்காக, தனது வங்கிக் கணக்கு உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சென்றுள்ளார்.

அவரது வங்கிக் கணக்கு இருப்பதை சரிபார்த்த வங்கி ஊழியர் பேரதிர்ச்சிக்கு உள்ளானார். காரணம், மானியத் தொகை வந்துவிட்டதா எனப் பார்க்க வந்த ஏழைப் பெண்ணின் கணக்கில், ரூ. 99,99,99,997 இருப்பு இருந்துள்ளது. அதாவது, ரூ. 100 கோடிக்கு 3 ரூபாய் குறைவு.

இதையடுத்து, அந்த பெண்ணின் ஒரேவொரு வங்கிக் கணக்கை முடக்கியுள்ள அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு வங்கத்தில் வங்கிப் பரிவர்த்தனைகளைப் பாதித்த சர்வர் கோளாறு காரணமாகவே இந்த தொகை தவறாக வரவு வைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று, கொல்கத்தாவில் கிளவுட் கிச்சன் நடத்தி வரும் நுபுர் குப்தா என்ற பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ. 47 கோடி வரவு வைக்கப்பட்டிருந்தது கடந்த வெள்ளிகிழமை தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, நுபுர் குப்தா மற்றும் வங்கி அதிகாரிகளிடம் காவல்துறையும், வருமான வரித்துறையும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஆய்வு செய்து வருவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தவறுதலாக வரவு வைக்கப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு நடந்ததா என்பது குறித்து வங்கித் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடவில்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset