செய்திகள் மலேசியா
மலேசியா உலகளாவிய தொழிலாளர் நிர்வாகக் கட்டமைப்பில் தனது பங்கை வலுப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
ஜெனீவாவில் நடைபெற்ற 114ஆவது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் (ஐஎல்சி) பங்கேற்றதன் மூலம், உலகளாவிய தொழிலாளர் நிர்வாகக் கட்டமைப்பில் மலேசியா தனது பங்கைத் தொடர்ந்து தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார்.
வேகமாக மாறிவரும் இன்றைய பணி உலகத்தின் மாற்றங்களை நிர்வகிப்பதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளை உருவாக்குவதில் மலேசியா தொடர்ந்து உறுதியாக உள்ளது.
சமூக பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு மற்றும் தொழில்துறை உறவுகளின் மேம்பாடு போன்ற விடயங்களில், தொழிலாளர் சந்தையின் மாற்றங்களுக்கு ஏற்ப, மிகவும் சுறுசுறுப்பான மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை உருவாக்குவதற்காக முக்கிய சர்வதேச நிறுவனங்களுடன் மலேசியா மூலோபாய ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது.
சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணியில் மலேசியாவின் தீவிர பங்கேற்பு, உலக அளவில் சமூக நீதி, தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் நாட்டின் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொழிலாளர் சக்தியின் மீது புதிய ஏற்றத்தாழ்வுகளை உருவாக்காமல் தடுப்பதற்கு, தெளிவான, பயனுள்ள கொள்கைக் கட்டமைப்புகளுடன் தொழில்நுட்ப வளர்ச்சியைச் சமநிலைப்படுத்துவது அவசியம் என்று இந்த மாநாட்டின் போது மலேசியா வலியுறுத்தியது.
அதேவேளையில், நிலையான தொழிலாளர் நிர்வாகத்திற்கு அடிப்படையாக விளங்கும் முத்தரப்பு அணுகுமுறையை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்துவதன் மூலம், நாட்டின் தொழிலாளர் கொள்கை கட்டமைப்பின் நம்பகத்தன்மை குறித்து சர்வதேச சமூகத்திடம் நம்பிக்கையை மலேசியா அதிகரித்துள்ளது.
இந்த சர்வதேச தளத்தின் மூலம், கிக் தொழிலாளர் சட்டம் மற்றும் வேலை தொடர்பான விபத்துக்கள் அல்லாத காப்பீட்டுத் திட்டம் (லிண்டுங் 24) போன்ற உள்நாட்டு முன்முயற்சிகளை மலேசியா பகிர்ந்து கொண்டது.
தொழிலாளர் பாதுகாப்பு முறைகளை வலுப்படுத்துவதிலும், மிகவும் முற்போக்கான தொழிலாளர் தரநிலைகளை மேம்படுத்துவதிலும் இவை முக்கியமான குறிப்புகளாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலகளாவிய தொழிலாளர் சந்தையில் அதிகரித்து வரும் சிக்கலான சவால்களை எதிர்கொள்ள, சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல், தொழிலாளர் திறனை மேம்படுத்துதல் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப பதிலளிக்கக்கூடிய கொள்கைகளை ஒருங்கிணைத்தல் போன்றவற்றின் அவசியத்தையும் மலேசியா எடுத்துரைத்தது.
114-வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் மலேசியாவின் இந்தப் பங்கேற்பு, எதிர்கால சவால்களை எதிர்கொள்வதிலும், மிகவும் நிலையான, நியாயமான மற்றும் முற்போக்கான உலகளாவிய தொழிலாளர் விதிமுறைகளை வடிவமைப்பதிலும் ஒரு ஆக்கபூர்வமான மற்றும் செல்வாக்கு மிக்க குரலாக நாட்டின் நிலையை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்தியுள்ளது என்று டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2026, 5:52 pm
கோலாலம்பூர் பள்ளிகளில் கூடுதல் போக்குவரத்து அதிகாரிகளை போலிஸ் பணியில் அமர்த்தியுள்ளது
June 12, 2026, 12:47 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11, நெகிரி செம்பிலான் ஆகஸ்ட் 1இல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்
June 12, 2026, 12:45 pm
