நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

17 ஆண்டுகள் போலி விமானி உரிமத்துடன் விமானங்களை இயக்கிய முன்னாள் ஏர் கனடா விமானி கைது

ஒட்டாவா: 

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக போலி விமானி உரிமத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏர் கனடாவின் முன்னாள் விமானி ஒருவர், தற்போது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார்.

கனடா காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, ஜெஃப்ரி வால் (Geoffrey Wall) என்ற முன்னாள் விமானி கடந்த ஜூன் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், 2009 முதல் 2025 வரை தேவையான உயர்நிலை விமானி உரிமம், கட்டாயத் தகுதித் தேர்வுகள் இன்றி, 900-க்கும் மேற்பட்ட உள்நாட்டு, சர்வதேச விமானங்களை அவர் இயக்கியதாக தெரியவந்துள்ளது.

அந்தக் காலகட்டத்தில் அவர் 2 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் 8.14 மில்லியன் ரிங்கிட்) அதிகமான ஊதியம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீல் பிராந்திய காவல்துறையின் துணைத் தலைவர் மிலினோவிச், “இந்தச் சம்பவம் ஒரு திரைப்படக் கதையைப் போன்றது” என குறிப்பிட்டார்.

2002ஆம் ஆண்டு வெளியான Catch Me If You Can திரைப்படத்தில் போலி விமானியாக அதிகாரிகளை ஏமாற்றும் கதாபாத்திரத்துடன் இந்தச் சம்பவத்தை அவர் ஒப்பிட்டார்.

ஏர் கனடாவில் 27 ஆண்டுகள் பணியாற்றிய ஜெஃப்ரி வால், வணிக விமானங்களை இயக்குவதற்கான சில உரிமங்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், 2009ஆம் ஆண்டு கேப்டனாக பதவி உயர்வு பெற்றபோது கட்டாயமாக இருக்க வேண்டிய Airline Transport Pilot Licence for Aeroplanes (ATPL-A) எனப்படும் உயர்நிலை விமானி உரிமத்தை அவர் ஒருபோதும் பெற்றிருக்கவில்லை என காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, ஜெஃப்ரி வால் 2025ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் ‘Project Icarus’ என்ற பெயரில் ஒழுங்குமுறை, குற்றவியல் விசாரணைகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம், விமானப் பாதுகாப்பு, தகுதிச் சான்றிதழ் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து கனடாவில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset