நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகிற்கு அதிகாரம் அல்ல, தெளிவான திசைகாட்டும் தலைமைத்துவம் தேவை: அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தல்

டோக்கியோ: 

உலகம் இன்று அதிகாரப் பற்றாக்குறையால் அல்ல, மாறாக தெளிவான தலைமைத்துவப் பார்வை, வழிகாட்டுதலின் பற்றாக்குறையால்தான் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“Navigating Strategic Uncertainty” (மூலோபாய நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வது) என்ற தலைப்பில் நடைபெற்ற நிக்கெய் மன்றத்தில் உரையாற்றிய அவர், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் சவால்களைச் சமாளிக்க உலக நாடுகள் மீண்டும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில், பயனுள்ள தலைமைத்துவம் என்பது அதிகாரத்தை வெளிப்படுத்துவதில் அல்ல; மாறாக, சரியான திசையைத் தெளிவாகக் காட்டுவதில்தான் இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

“பழங்கால மாலுமிகளால் ஒவ்வொரு புயலையும் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை. கடல் நீரோட்டங்களை அவர்களால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அடிவானத்திற்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்களிடம் இருந்த மிகப்பெரிய பலம், தெளிவான திசை உணர்வாகும்,” என்று அன்வார் கூறினார்.

உலகிற்கு அதிகாரமோ வளங்களோ குறைவாக இல்லை. ஆனால் தெளிவான பார்வை, உறுதியான வழிகாட்டுதல், தொலைநோக்குச் சிந்தனையே இன்று மிகவும் தேவைப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உலகளாவிய நிறுவனங்கள் கைவிடப்பட வேண்டியவை அல்ல; அவை சீர்திருத்தப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டியவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய உலகச் சவால்களை எதிர்கால வாய்ப்புகளாக மாற்றும் சக்தி மனிதகுலத்திடம் இருப்பதாகவும், அதற்குத் தேவையானது சரியான திசை, ஒத்துழைப்பு, புதுப்பிக்கப்பட்ட தலைமைத்துவம் மட்டுமே என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

“இந்த அடிப்படைக் கொள்கைகளை நாம் தொடர்ந்து பின்பற்றினால், இன்றைய சவால்களை நாளைய வெற்றிகரமான வாய்ப்புகளாக மாற்ற முடியும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

“மிகவும் வலிமையான, செழிப்பான ஆசியாவிற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற 31வது நிக்கெய் மன்றத்தின் தொடக்க நிகழ்வில் முதன்மை உரையை வழங்கியவர் அன்வாரே என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset