நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவின் பிரபல உருது கவிஞர் பஷீர் பத்ர் 91 வயதில் காலமானார்

ஹைதராபாத்:

இந்தியாவின் மிகவும் பிரபலமான உருது கவிஞர் பஷீர் பத்ர், வியாழக்கிழமை அன்று தனது 91 வயதில் காலமானார்.

நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் கடைசி மூச்சை விட்டார்.

'கஸல்' வடிவத்தில் பத்ரின் கவிதை வாசிப்புகள் எப்போதும் இடம்பெற்று, தெற்காசியாவில் உள்ள பெரிய உருது மொழி பேசும் சமூகத்தின் இதயங்களைத் தொட்டன.

1935 ஆம் ஆண்டில் வட இந்தியாவின் அயோத்தியில் பிறந்த அவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) முனைவர் பட்டம் (Ph.D) வரை பயின்றார்.

அதனைத் தொடர்ந்து, அவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர், மீரட் நகரத்தில் உள்ள மீரட் கல்லூரியில் சேர்ந்தார், மேலும் அங்கு 17 ஆண்டுகள் வாழ்ந்தார்.

1987 ஆம் ஆண்டில் மீரட்டில் இன மோதல் காரணமாக ஏற்பட்ட இரத்தக்களரியில் அவரது இல்லம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பத்ர் போபாலுக்குக் குடிபெயர்ந்தார். புதிய நகரில் உருது இலக்கியத்தின் விரைவான வளர்ச்சி, அவரது திறமையை மேலும் வளர்க்க உதவியது.

"பத்ர் போபாலுக்குக் குடிபெயர்ந்தபோது, அவர் பல புகழ்பெற்ற கவிஞர்களால் சூழப்பட்டார். இது, அவரது கவிதைப் படைப்பாற்றலுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது.

"அவர் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக உருது இலக்கியத்திற்கு சேவை செய்தார், மேலும் கஸல் கவிதைத் துறையில் அவரது பெரும் பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்" என்று போபாலைத் தளமாகக் கொண்ட பத்திரிகையாளர் ஷம்ஸ் உர் ரஹ்மான் அலாவி கூறினார்.

"நவீன காலத்தின் ஒரு சிறந்த கவிஞர், பஷீர் பத்ர் தனது கவிதைகள், தனித்துவமான 'தரன்னும்' (பாடும்) பாணிக்காகப் பிரபலமானவர்" என்று லக்னோவில் உள்ள AMU முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் சையது முஹம்மத் ஷோய்ப் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இறந்தவர் கலந்து கொண்ட கவிதை மாநாடுகளில் (முஷாயிராக்கள்), பஷீர் பத்ர் வாசித்ததைத் தவிர வேறு எந்தக் கவிதையையும் கேட்க யாரும் விரும்பாத அளவுக்கு, அவர் பார்வையாளர்களைக் கவர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

சமூகக் கதைகள், காதல், அரசியல், போர், வெறித்தனம், நையாண்டி ஆகியவை பத்ரின் கவிதைகளில் அடிக்கடி இடம்பெற்ற கருப்பொருள்களில் அடங்கும். இவை, அவரது பெயரைத் தொடர்ந்து உயர்த்தின.

அவரது ஒரு கவிதையில், கருத்து வேறுபாடு கொள்ளும் போது, வெறுப்பதில் மிகைப்படுத்த வேண்டாம் என்று அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார். அதன் பொருள்: "ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பகைமை கொள்ளுங்கள், எதிர்காலத்தில் நாம் மீண்டும் நண்பர்களாகும்போது, (கடந்தகால பகைமையை நினைத்து) நாம் வெட்கப்பட வேண்டியதில்லை."

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset