நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

222 தொகுதிகளில் தீவிரமான உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை செயல்படுத்த வேண்டும்; கட்சியின் பலம் உறுப்பினர்களிடமே உள்ளது: குணராஜ்

செந்தோசா:

கெஅடிலான் நாடு தழுவிய அதன் 222 தொகுதிகளில் இன்னும் தீவிரமான உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் மூலம் தனது அடிமட்ட பலத்தை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.

கட்சியின் பலம் உறுப்பினர்களிடமே உள்ளது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.

கோத்தா ராஜா கெஅடிலான் தொகுரி 25 புதிய கிளைகளை நிறுவி, 3,000-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் கிளையில் இணைந்தனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து பண்டார் செந்தோசாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

இந்தச் சாதனை கெஅடிலானுக்கான ஆதரவு தொடர்ந்து வளர்ந்து வருவதையும், கட்சியின் பலம் உறுதியான அடித்தளத்தில் இருப்பதையும் நிரூபிக்கிறது.

கெஅடிலானின்  இன்றைய பலத்தை மறுக்க முடியாது.

இருப்பினும் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலமும், அடிமட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலமும் அந்தப் பலம் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும்.

இறுதியில், கட்சியின் உண்மையான பலம் அதன் உறுப்பினர்கள்தான்.

போராட்டத்தைக் கைவிடத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு தனிநபராலும் கட்சி பெரிதாக ஈர்க்கப்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

அரசியல் பயணத்தில் பலர் வந்திருக்கிறார்கள், பலர் சென்றிருக்கிறார்கள். அது எந்தக் கட்சியிலும் இயல்பானது.

யாரும் என்றென்றும் நிலைத்திருப்பதில்லை.

ஆனால் போராட்டம், தொலைநோக்குப் பார்வை மற்றும் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சி தொடர்ந்து நிலைத்திருக்கும்.

அதே நேரத்தில் அதன் கொள்கைகளின் வலிமை, அதன் போராட்டத்தின் நிலைத்தன்மை மற்றும் மக்களுக்கான கட்சியின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் மேலும் மக்கள் கெஅடிலானுடன் இருக்கத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

மேலும் இது தொடர்பாக, இளைஞர்கள், பெண்கள், தொழில் வல்லுநர்கள், தொழிலாளர்கள், பல்வேறு தரப்பு மக்களைச் சென்றடைவதன் மூலம் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதை ஒரு முக்கிய செயல்திட்டமாகக் கொள்ளுமாறு அனைத்து 222 கெஅடிலான் தொகுதிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

மக்கள் நம்மிடம் வருவார்கள் என்று காத்திருக்க வேண்டாம்.

நாம் களத்திற்குச் சென்று, மக்களைச் சென்றடைந்து, இந்தப் போராட்டத்தில் மேலும் பலர் இணைவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று கெஅடிலான் உச்சமன்ற உறுப்பினருமான குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்





தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset