நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

20வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வென்ற பிரிட்டிஷ் சாகச வீரர்

காட்மாண்டு: 

உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டை, பிரிட்டனைச் சேர்ந்த சாகச மலையேற்ற வீரர் கென்டன் கூல், 20வது முறையாக வெற்றிகரமாக அடைந்து புதிய வரலாற்றை படைத்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்தவர் அல்லாத ஒருவரால் நிகழ்த்தப்பட்ட அதிகபட்ச எவரெஸ்ட் ஏற்ற சாதனையை, அவர் மீண்டும் தன்னுடைய பெயரிலேயே உறுதிப்படுத்தியுள்ளார்.

52 வயதான கென்டன் கூல், சாதாரண மலையேற்ற வீரர் மட்டுமல்ல, உலகின் மிக அபாயகரமான சிகரங்களைக் கைப்பற்றும் அனுபவமிக்க மலை வழிகாட்டி. 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்டை முதன்முதலாக கடந்த 2004ஆம் ஆண்டு அடைந்த அவர், அதன் பின்னர் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் சிகரத்தை நோக்கி சவாலான பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

 1996ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பாறை ஏற்ற விபத்தில் அவரது இரு குதிகால் எலும்புகளும் முறிந்தன. அப்போது, “இனி உதவியின்றி நடக்கவே முடியாது” என மருத்துவர்கள் எச்சரித்திருந்த நிலையிலும், மனவலிமையால் உலகையே வியக்க வைத்துள்ளார் கூல்.

2021ஆம் ஆண்டு, அமெரிக்க மலையேற்ற வீரர் டேவ் ஹானின் சாதனையை சமன் செய்த அவர், அதற்குப் பின்னர் தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வருகிறார்.

இதற்கிடையில், “எவரெஸ்ட் மனிதர்” என அழைக்கப்படும் நேபாளத்தின் காமி ரிட்டா ஷெர்பா, கடந்த வாரம் 32வது முறையாக எவரெஸ்டை அடைந்து தனது சொந்த உலக சாதனையை மேலும் உயர்த்தினார். அதேவேளை, லக்பா ஷெர்பா 11வது முறையாக சிகரத்தை அடைந்து பெண்களுக்கான புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

இந்த ஆண்டின் மலையேற்ற பருவத்தில் மட்டும், நேபாள அரசு 492 எவரெஸ்ட் ஏற்ற அனுமதிகளை வழங்கியுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset