நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹோர்முஸ் நீரிணைப் பதற்றம்: ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்தியது

தெஹ்ரான் - 

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் மீது நடத்தப்பட்ட புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈரானுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை விலக்குச் சலுகையை ரத்து செய்வதன் மூலம் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனியின் 'டிபிஏ' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் கச்சா எண்ணெய், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் தயாரிப்புகள் தொடர்பான தற்காலிக வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு அனுமதி அளித்திருந்த உரிமத்தை அமெரிக்காவின் வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) தற்போது ரத்து செய்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி விநியோகப் பாதையைத் திறப்பதற்காக டிரம்ப் நிர்வாகம் கடந்த மாதம் ஈரானுக்கு இந்த 60 நாள் தற்காலிகத் தடை விலக்கை வழங்கியிருந்தது.

கத்தாரின் எல்என்ஜி (LNG) கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கத்தார் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் நீடிப்பு ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமைந்திருந்ததால், தற்போது இந்தச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி விளக்கியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலக சந்தையில் ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை ஐந்து விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்து ஒரு பேரல் 76 அமெரிக்க டாலராக வர்த்தகமாகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset