செய்திகள் உலகம்
பிரசவ அறையாக மாறிய நீதிமன்றம்: மகிழ்ச்சியும் சோகமும் நிறைந்த நீதிமன்ற பிரசவம்
நியூயார்க்:
அமெரிக்காவின் புரூக்ளின் குற்றவியல் நீதிமன்றத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பரபரப்பான சம்பவம் ஒன்று அரங்கேறியது. போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண், திடீரென நீதிமன்ற அறையிலேயே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியது.
33 வயதான சமந்தா ரண்டாசோ என்ற பெண், வழக்கு விசாரணைக்காக காத்திருந்த வேளையில் திடீரென பிரசவ வலியால் துடித்தார். நள்ளிரவை நெருங்கிய அந்த தருணத்தில், அவரது பனிக்குட நீர் உடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற இருக்கையிலேயே அவர் சாய்ந்து விழுந்ததாக அவரது வழக்கறிஞர் வின்டன் ஷார்ப் தெரிவித்தார்.
“அவர் எதுவும் சொல்லவே வேண்டியதில்லை… நிலைமை என்ன என்பதை அங்கே இருந்த அனைவரும் உடனே புரிந்துகொண்டார்கள். சில நிமிடங்களில் நீதிமன்றமே பிரசவ அறையாக மாறிவிட்டது,” என்று அவர் கூறினார்.
போலிஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என பலர் மத்தியில், பரபரப்பான சூழ்நிலையில் அந்தப் பெண் ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
முன்னதாக, ஷீப்ஸ்ஹெட் பே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் கூரையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் இருந்ததாகக் கூறி ரண்டாசோ கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டபோது தளர்வான ஆடையில் இருந்ததால் அவர் கர்ப்பிணி என்பதை அதிகாரிகள் உணரவில்லை என்றும் தானும் அதைப் பற்றி தெரிவிக்கவில்லை என்றும் போலிஸ் தரப்பு கூறியது.
பின்னர் உடல்நலக்குறைவு, போதைப்பொருள் விலகல் அறிகுறிகள் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் குறுகிய பிரசவ காலத்தில் இருப்பதை மருத்துவர்களே கவனிக்காமல் வீட்டிற்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதியில், நீதிமன்ற அறையிலேயே குழந்தை பிறந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
“இது ஒருபுறம் மகிழ்ச்சியான தருணம் என்றாலும், மறுபுறம் மிகவும் சோகமான சமூக உண்மையையும் வெளிப்படுத்துகிறது,” என வழக்கறிஞர் ஷார்ப் வேதனையுடன் குறிப்பிட்டார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 20, 2026, 11:38 am
விமானத்தில் மனித இயந்திரம்: அதைத் தடைசெய்த விமான நிறுவனம்
May 19, 2026, 8:31 pm
லண்டன் துணிக்கடையில் புகுந்த முகமூடி திருடர்கள்: அதிரடியாய்ப் பாய்ந்து பிடித்தப் பெண்கள்
May 19, 2026, 8:16 pm
26 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பரில் சிங்கப்பூரின் ‘ஸ்னோ சிட்டி’ மூடப்படும்
May 19, 2026, 10:40 am
காங்கோவில் இபோலோ தொற்றினால் 91 பேர் மாண்டனர்: அமெரிக்க விமான நிலையங்களில் கடும் பரிசோதனை
May 18, 2026, 7:26 pm
ராயல் கிங்க்ஸ் குழுமத் தலைவர் சிராஜுத்தீனுக்கு கலைச் செம்மல் விருது
May 14, 2026, 3:57 pm
