செய்திகள் உலகம்
எம்வி ஹோண்டியஸ் கப்பலில் ஹந்தாவைரஸ்: இதுவரை 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன
ஜெனீவா:
எம்வி ஹோண்டியஸ் கப்பலில் ஏற்பட்ட ஹண்டா வைரஸ் பரவலானது அந்தக் கப்பலை ஏறிய நெதர்லாந்து தம்பதியினரால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. பின்னர், அந்தத் தொற்று காரணமாகவே அவர்கள் இறந்ததாக உறுதி செய்யப்பட்டதாக உலக சுகாதார மையம் நம்புவதாக யுஎஸ்ஏ டுடே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே இணையத்தளம், மே 7 அன்று நடைபெற்ற ஒரு விளக்கக் கூட்டத்தில், உலக சுகாதார மையம் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸின் அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது. கப்பலில் ஏறுவதற்கு முன், அந்தத் தம்பதியினர் அர்ஜென்டினா, சில்லி உருகுவே ஆகிய நாடுகளில் பறவைப் பார்வை (bird-watching) நடவடிக்கைகளில் பங்கேற்றதாகத் தெரிவித்துள்ளது.
ஹண்டா வைரஸைக் கொண்டு செல்லும் எலி வகைகள் உள்ள இடங்களிலும் அந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டதாக டெட்ரோஸ் கூறினார்.
உலக சுகாதார மையத்தின் உள்ளூர்நோய், தொற்றுநோய் மேலாண்மைத் துறையின் இயக்குநர் டாக்டர் மரியா வான் கெர்கோவ், மே 5 ஆம் தேதி, எம்வி ஹோண்டியஸ், ஆப்பிரிக்கக் கடற்கரைக்கு அருகில் உள்ள பல தீவுகளிலும் நிறுத்தப்பட்டதாகவும், மற்ற நபர்கள் அந்த வைரஸுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும் கூறினார்.
"அந்தத் தம்பதியினர், ஒரு அறையைப் பகிர்ந்து கொண்ட நபர்கள், பலருக்கிடையே சில மனிதனுக்கு மனிதன் பரவுதல் ஏற்பட்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று வான் கெர்கோவ் தெரிவித்தார்.
ஹண்டா வைரஸ் பொதுவாக எலிகளுடனான தொடர்பு மூலம் பரவுகிறது. இருப்பினும், இந்த விகாரத்தை, ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்குப் பரவக்கூடிய ஒரு விகாரமாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதற்கிடையில், மே 11 ஆம் தேதி நடைபெற்ற ஒரு விளக்கக் கூட்டத்தில், அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையத்தின் (CDC) உயர் தாக்க நோய்க்கிருமிகள், நோயியல் பிரிவின் தற்காலிக இயக்குநர் டாக்டர் பிரெண்டன் ஜாக்சன், இந்த விகாரமான ஆண்டீஸ் வைரஸ், குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு, 1.8 மீட்டர் இடைவெளிக்குள் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களுக்கிடையே பரவுவதாக நம்பப்படுகிறது என்று கூறினார்.
"பொதுவாக, நாங்கள் குறிப்பாக உடல் திரவங்களுக்கு வெளிப்படுவது பற்றிப் பேசுகிறோம். அதில் உமிழ்நீரும் அடங்கும். எனவே, உணவுப் பாத்திரங்களைப் பகிர்ந்து கொள்வது, முத்தமிடுவது, தொடுவது இந்த நோய் பரவலுக்கு வழி வகுப்பதாக தெரியவந்துள்ளது.
"அதாவது, ஒரு நபருடன் மிகவும் நெருங்கிய தொடர்பில், ஒப்பீட்டளவில் நீண்ட காலத்திற்கு இருப்பவர்கள் மட்டுமே ஆபத்தில் உள்ளனர்" என்று ஜாக்சன் கூறினார்.
இதற்கிடையில், எம்வி ஹோண்டியஸ் கப்பலில் ஏற்பட்ட ஹண்டா வைரஸ் பரவலில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர்களில் இருவருக்கு ஹண்டா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வழக்கு சாத்தியமானதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உயிர் தப்பித்த நோயாளிகளில், ஏழு வழக்குகளில் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எட்டாவது வழக்கு "சாத்தியமானது" என பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 11, 2026, 10:53 am
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை
May 10, 2026, 10:37 am
களை கட்டக் காத்திருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து தொடக்க விழா
May 9, 2026, 10:40 am
