நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெண்ணைப் பழிவாங்கப் பள்ளிவாசலைப் பயன்படுத்திய விபரீதம்: மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சி

சிங்கப்பூர்: 

தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் மீதிருந்த அதிருப்தியின்காரணமாக, ஆடவர் ஒருவர் அந்தப் பெண்ணின் விவரங்களுடன், பன்றி இறைச்சித் துண்டுகளைக் கொண்ட கடிதங்களைப் பல பள்ளிவாசல்களுக்கு அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

62 வயதுடைய பில் டான் கெங் ஹ்வீ, மே 11 அன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். மசூதியில் உள்ள பெறுநர்கள் சம்பந்தப்பட்ட பெண்ணைத் தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.

மூன்று இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்களைச் செய்ததாக மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கெங் ஹ்வீக்கு ஒரு வருடம் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்ணை உள்ளடக்கிய ஒரு தொந்தரவு குற்றச்சாட்டிலும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

"குற்றஞ்சாட்டப்பட்டவரின் செயல், நமது பன்முக கலாச்சார, பன்முக மத சமூகத்தின் நல்லிணக்கத்தை அச்சுறுத்துகிறது" என்று துணை வழக்குத் தொடரும் அதிகாரி செலீன் யாப் கூறியுள்ளார்.

நீதிமன்ற ஆவணங்களில் C1 என்று அழைக்கப்படும் அந்தப் பெண்ணின் அடையாள விவரங்கள், அவரது அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான தடை உத்தரவு காரணமாக வெளியிடப்பட முடியாது.

தண்டனையை வழங்கிய போது, மாவட்ட நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி-ஷனாஸ், இந்த வழக்கு வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கியதால் இத்தகைய குற்றங்கள் மதப் பதற்றத்தைத் தூண்டி, சிங்கப்பூரில் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

செப்டம்பர் 11, 2025 அன்று, C1 மீது அந்த சிங்கப்பூர் ஆணுக்கு அதிருப்தி இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

"அதற்குப் பின்னர், பன்றி இறைச்சித் துண்டுகளையும், C1-ன் தகவல்களையும் கொண்ட கடிதங்களைப் பல்வேறு மசூதிகளுக்கு அனுப்பும் திட்டத்தை அவர் வகுத்துள்ளார்.

"பன்றி இறைச்சித் துண்டுகள் இஸ்லாமியர்களைப் புண்படுத்தும் என்பதை அவர் அறிந்திருந்தார். மேலும், அந்தக் கடிதத்தைப் பெற்ற பின்னர், மசூதியில் உள்ள பெறுநர்கள், C1-ஐத் தொடர்புகொண்டு, அந்தப் பெண்ணைத் தொந்தரவு செய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும்" என்று யாப் கூறினார்.

அந்தக் கடிதங்களைத் தயாரித்த பின்னர், செப்டம்பர் 15, 2025 அன்று, அவற்றை வழக்கமான அஞ்சல் சேவை மூலம் ஏழு மசூதிகளுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த மசூதிகளை கெங் ஹ்வீ சீரற்ற முறையில் தேர்ந்தெடுத்ததாக யாப் கூறினார்.
செப்டம்பர் 19, 2025 அன்று, சம்பந்தப்பட்ட மசூதிகளுடன் தொடர்புடைய மூன்று நபர்கள், அந்தக் கடிதத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, போலிஸ் புகார்களைப் பதிவு செய்துள்ளனர்.

C1, ஒரு மசூதி ஊழியரிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றுள்ளார். அதையடுத்து, அதே நாளில் அவரும் ஒரு போலிஸ் புகாரைப் பதிவு செய்துள்ளார்.

மே 11 அன்று, அவருக்கு ஒரு வருடம் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்குமாறு யாப் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

"குற்றஞ்சாட்டப்பட்டவரின் செயல், நமது பன்முக கலாச்சார சமூகத்தில் பல ஆண்டுகளாகப் போற்றப்பட்டு வரும் அமைதியைக் குலைக்க வழி வகுக்கிறது. விதிக்கப்படும் தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்" என்று யாப் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset