செய்திகள் உலகம்
11 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் திரும்பிய தாய்:“இறந்துவிட்டார்” என நினைத்த குடும்பத்துக்கு அதிர்ச்சி திருப்பம்
பென்சில்வேனியா:
11 ஆண்டுகளாக மர்மமாகக் காணாமல் போய், இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரு தாய், திடீரென உயிருடன் மீண்டும் தோன்றிய சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மிரர் வெளியிட்ட தகவலின்படி, பிரெண்டா ஹெய்ஸ்ட் என்ற பெண், 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் பென்சில்வேனியாவில் தனது குழந்தைகளை பள்ளியில் இறக்கிவிட்டுச் சென்ற பின்னர் மர்மமாக மாயமானார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எந்தத் தகவலும் இல்லாமல் காணாமல் போன அவர், இறுதியில் 2013ஆம் ஆண்டு பாதுகாப்பான நிலையில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் காணாமல் போன காலம், தனது கணவர் லீ ஹெய்ஸ்டுடனான விவாகரத்து பிரச்சினை தீவிரமாக இருந்த காலமாகும். இதனால், அந்தச் சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும் பரபரப்பான ஊகங்களையும் கிளப்பியது. ஒருகட்டத்தில், லீ ஹெய்ஸ்ட் கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபராகவே பார்க்கப்பட்டார். எனினும், உறுதியான உடல் ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால், அதிகாரிகள் வழக்கை கைவிட்டனர்.
அறிக்கைகளின்படி, ஒரு நாள் பூங்காவில் அமர்ந்திருந்த பிரெண்டாவை மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் அணுகி, புளோரிடாவுக்கு தங்களுடன் வர அழைத்துள்ளனர். வாழ்க்கையின் அழுத்தங்களாலும் மன உளைச்சலாலும் சிக்கியிருந்த அவர், எதிர்கால விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், தனது கணவர், அப்போது 8, 12 வயதுடைய இரண்டு குழந்தைகளுக்குத் தகவல் கூட தெரிவிக்காமல் அந்தக் குழுவோடு சென்றுவிட்டார்.
அதன் பின்னர், முழு 11 ஆண்டுகள் அவர் “கெல்சி லியான் ஸ்மித்” என்ற போலிப் பெயரில், புளோரிடாவில் வீடற்ற பெண்ணாக இரகசிய வாழ்க்கை வாழ்ந்தார். அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்கள் தேவையில்லாத சலவைத் தொழில்கள் போன்ற வேலைகளை மட்டும் செய்து, ரொக்கப் பணம் பெற்றுக்கொண்டு, உலகின் கண்களிலிருந்து மறைந்து வாழ்ந்தார்.
இதற்கிடையில், தனது குழந்தைகளை தனியாக வளர்த்து வந்த லீ ஹெய்ஸ்ட், 2010ஆம் ஆண்டு பிரெண்டாவை சட்டரீதியாக இறந்தவர் என அறிவிக்க கோரிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிவிப்புக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், பிரெண்டா திடீரென மீண்டும் தோன்றி, காணாமல் போன ஆண்டுகளின் உண்மையை வெளிப்படுத்தியபோது, குடும்பமே சோகமும் அதிர்ச்சியும் கலந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அவரது மகள் மோர்கன் மனவேதனையுடன் பேசுகையில், “எங்களைத் துறந்து, வாழ்க்கையே சிதைந்து போகும் அளவுக்கு வலியை ஏற்படுத்திய தாயை மன்னிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
ஓட்டுநர் உரிமத்தைத் திருடிய குற்றச்சாட்டில் முன்னர் சிறைத் தண்டனை அனுபவித்திருந்த பிரெண்டா, தற்போது டெக்சாஸில் தனது தாயுடன் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது பழைய குடும்பத்தினருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 9, 2026, 10:40 am
சிங்கப்பூரர்கள் இருவருக்கு ஹண்டா வைரஸ் தொற்று இல்லை: சுகாதார அமைப்பு உறுதி
May 8, 2026, 3:59 pm
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: 2 சிங்கப்பூரர்கள் பலி
May 8, 2026, 2:53 pm
ஹன்தா தொற்று: 2 சிங்கப்பூரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
May 7, 2026, 4:11 pm
இந்தோனேசியாவில் எண்ணெய் லாரி மீது மோதிய பேருந்து: 16 பேர் உயிரிழந்தனர்
May 7, 2026, 9:57 am
