நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெற்றோரைப் பராமரிக்க புதிய சட்டம்: பிள்ளைகளின் கடமையை உறுதி செய்ய அரசு அதிரடி நடவடிக்கை

கோலாலம்பூர்: 

மலேசியாவில் முதியோர்களின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய 'பெற்றோர் பராமரிப்புச் சட்டத்தை' (Akta Penjagaan Ibu Bapa) அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

வரும் 2036-ஆம் ஆண்டிற்குள் மலேசியா முதியோர்கள் அதிகம் வாழும் நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இது குறித்துப் பேசிய துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, வளர்ந்து வரும் நவீன சமூகத்தில் பெற்றோரைப் பராமரிக்கும் சமூகப் பொறுப்பு குறைந்து வருவதாகக் கவலை தெரிவித்தார். 

எனவே, பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பிள்ளைகளின் பொறுப்பை உறுதிப்படுத்தவும் இச்சட்டம் வழிவகுக்கும். 

இது தொடர்பான வரைவு அறிக்கையை இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மத விழுமியங்கள், கிழக்கு நாடுகளின் கலாச்சாரப் பண்புகளைப் பாதுகாப்பது அவசியம் என வலியுறுத்திய துணைப் பிரதமர், முதியோர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிட்டு அவர்களைச் சந்திக்காமல் இருப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றார். 

உலகியல் வளர்ச்சிக்கு இணையாக மனிதாபிமானமும் குடும்ப உறவுகளும் பேணப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகும்.

ஏற்கனவே சில நாடுகளில் இத்தகைய சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், அவற்றைப் பின்பற்றி மலேசியாவின் கலாச்சாரத்திற்கு ஏற்ப இச்சட்டம் வடிவமைக்கப்படும். 

இதன் மூலம் அனைத்து மதத்தினரிடையேயும் சமூகத்தினரிடையேயும் பெற்றோரைப் பேணுதல் குறித்த விழிப்புணர்வும் புரிதலும் மேம்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset