நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைப்பட்டாணியில் துயரம்: பாழடைந்த வீட்டின் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட முதியவர்

சுங்கைப்பட்டாணி: 

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போன 84 வயது முதியவர் முஹம்மத் காலித், ஐந்து நாட்களுக்குப் பிறகு தீக்காம் பத்து பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் அருகே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 

கடந்த சில நாட்களாகத் தீவிரமாக நடைபெற்று வந்த தேடுதல் வேட்டை, இன்று காலை 11 மணியளவில் இச்சோகமான முடிவுடன் நிறைவுக்கு வந்தது.

இதய நோய் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த அந்த முதியவர், தனது வீட்டிற்கு அருகிலுள்ள நீர்நிலை ஒன்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவிற்குத் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. 

இருப்பினும், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மீட்புப் பணிகள் நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

தங்கள் தந்தையின் மறைவை எண்ணிக் குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ள போதிலும், தேடுதல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். 

வழிதவறிச் சென்ற முதியவர் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த நிலையில், போதிய உணவு அல்லது உடல்நலக் குறைவால் உயிரிழந்திருக்கலாம் என்று தீயணைப்பு, மீட்புத் துறையினர் கருதுகின்றனர்.

இது குறித்துக் கோலா மூடா மாவட்ட இடைக்காலக் காவல்துறைத் தலைவர் சரவணன் ஷண்முகம் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் இச்சம்பவத்தில் எவ்வித குற்றச் செயல்களுக்கான அறிகுறியும் இல்லை எனத் தெரிவித்தார். 

முதியவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset