நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 ஆண்டுகளாக சட்டவிரோதமாகச் செயல்பட்ட நெகிழி கழிவு மறுசுழற்சி ஆலைக்கு போலிஸ் முற்றுப்புள்ளி

சுங்கைப்பட்டாணி: 

கெடா மாநிலத்தின் சுங்கைப்பட்டாணி பகுதியில், உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த நெகிழி கழிவு மறுசுழற்சி ஆலை ஒன்றை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையிட்டு முடக்கினர். 

'ஓப் தாரிங் ஆல்பா 5' (Op Taring Alpha 5) என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த சோதனையில், காவல்துறையினர், சுற்றுச்சூழல் துறை, சுங்கைப்பட்டாணி நகராட்சி மன்ற அதிகாரிகள் எனப் பல தரப்பினர் பங்கேற்றனர்.

இந்தச் சோதனையின் போது, அந்த ஆலையின் உரிமையாளரான 50 வயது மதிக்கத்தக்க உள்ளூர் நபர் ஒருவரைப் போலிசார் கைது செய்தனர். பூர்வாங்க விசாரணையில், இந்த ஆலை கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் எவ்வித சோதனைகளுக்கும் உள்ளாகாமல் ரகசியமாக இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. 

இங்கு மறுசுழற்சி செய்யப்படும் நெகிழித் துகள்கள், கெடா, பினாங்கு மாநிலங்களில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்குப் புதிய பொருட்கள் தயாரிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது, சுமார் 200 டன் எடையுள்ள நெகிழி கழிவுகள், அவற்றைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் ஒட்டுமொத்த மதிப்பு RM80 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த ஆலைக்குத் தேவையான மூலப்பொருட்கள் கெடா, பினாங்கு மாநிலங்களில் உள்ள தொழில்பேட்டைகளில் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்த வழக்கு சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இதற்கிடையில், உரிய வணிக உரிமம் இன்றி செயல்பட்டதற்காகச் சுங்கை பட்டாணி நகராட்சி மன்றம் அந்த உரிமையாளருக்கு 1,000 ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset