நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கண்காணிப்புக் கேமராவில் சிக்கிய கொடூரம்: சிறுவர்களை நாய் கூண்டில் அடைத்த பணிப்பெண் கைது

ஹாங்காங்:

ஹாங்காங்கில் தான் பராமரித்து வந்த இரண்டு சிறுவர்களை நாய் கூண்டிற்குள் அடைத்து வைத்ததாகக் கூறப்படும் புகாரில் 32 வயது வீட்டுப் பணிப்பெண் ஒருவரைப் போலிசார் கைது செய்துள்ளனர். 

கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, குழந்தைகளின் தாய் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவைப் (CCTV) பரிசோதித்தபோது, தனது இரண்டு, மூன்று வயதுடைய மகன்கள் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

முதல் சம்பவம் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. பணிப்பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் தீங்கு விளைவிப்பாரோ என்ற அச்சத்தில் தாய் அப்போது புகார் அளிக்கவில்லை. 

ஆனால், பிப்ரவரி 21-ஆம் தேதி மீண்டும் ஒரு சிறுவன் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதையும், பணிப்பெண் அருகில் அமர்ந்து கைபேசியைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் கேமரா பதிவுகள் காட்டின. 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்தப் பணிப்பெண் அங்கு வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனது வேலைவாய்ப்பு முகமையின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே அந்தத் தாய் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, குழந்தைகளைத் துன்புறுத்தியது, கவனக்குறைவாகச் செயல்பட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதற்கட்ட சோதனையில் அவர்களுக்குப் பலத்த காயங்கள் ஏதுமில்லை எனத் தெரியவந்துள்ளது. 

இருப்பினும், இந்தச் சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset