நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதுபோதையில் வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரிப்பது கவலையளிக்கின்றன; கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

மதுபோதையில் வாகனம் ஓட்டும் பிரச்சினைக்குத் தீர்வு காண கடுமையான, அசாதாரண நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும்.

டிஎஸ்கே சமுக நல அமைப்பின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

ஜாலான் அம்பாங்கில் ஒரு தம்பதியரின் உயிரைப் பறித்து, அவர்களது மூன்று குழந்தைகளை அனாதைகளாக்கிய சமீபத்திய துயரச் சம்பவம், தற்போதுள்ள அணுகுமுறை இன்னும் பலவீனமாக இருப்பதையும்,

குற்றவாளிகளுக்குப் பாடம் கற்பிக்கத் தவறிவிட்டதையும் நிரூபித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள் அதிகரிப்பது குறித்து தாம்  இதற்கு முன்பு பலமுறை கவலை தெரிவித்துள்ளேன்.

 அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் பல்வேறு பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளேன்.

ஆனால் அதே சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? இந்தப் பிரச்சினை நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இன்று நடந்த சம்பவம், பலர் இன்னும் சட்டத்திற்கு அஞ்சவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஒவ்வொரு முறையும் ஒரு துயரம் நிகழும்போது, ​​சமூகம் சில நாட்களுக்குக் கோபமடைகிறது. பின்னர் புதிய உயிரிழப்புகள் ஏற்படும் வரை எல்லாம் மீண்டும் அமைதியாகிவிடுகிறது.

மக்களின் உயிர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் அரசாங்கம் பருவகால அணுகுமுறையைத் தொடர்ந்து பின்பற்ற முடியாது என்று அவர் கூறினார்.

மது போதையில் வாகனம் ஓட்டுவது ஒரு கடுமையான குற்றமாக வகைப்படுத்தப்பட வேண்டும்.

காரணம் அது மற்ற சாலைப் பயனாளிகளின் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அதீத அலட்சியத்தை உள்ளடக்கியது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

மேலும், மரணத்தை ஏற்படுத்தும் வழக்குகளுக்குக் கட்டாயச் சிறைத்தண்டனை, நீண்ட காலத்திற்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தல்,  மீண்டும் குற்றம் செய்பவர்களுக்கு வாழ்நாள் தடை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset