நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவத்துறையில் பெரும் சரிவு: செயல்பாட்டுச் செலவை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் 70% கிளினிக்குகள்

கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள சுமார் 10,000 தனியார் கிளினிக்குகளில் (GP Clinics) பெரும்பான்மையானவை, தங்களது அன்றாடச் செயல்பாட்டுச் செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாமல் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. 

மலேசிய மருத்துவச் சங்கம் (MMA) நடத்திய ஆய்வில், 70 விழுக்காட்டிற்கும் அதிகமான கிளினிக்குகள் மாதத்திற்கு RM60,000 ரிங்கிட்டிற்கும் குறைவான வருமானத்தையே ஈட்டுவது தெரியவந்துள்ளது. 

மருந்துகள், இதர மருத்துவப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்துள்ள கிளினிக்குகளின் எண்ணிக்கை, போதிய நோயாளிகள் வருகை இல்லாதது ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

சுகாதார அமைச்சில் நிலவும் ஒப்பந்த முறை, தெளிவற்ற பணி உயர்வுச் சூழல் காரணமாக, பல இளம் மருத்துவர்கள் அரசுப் பணியிலிருந்து விலகித் தனியார் கிளினிக்குகளைத் தொடங்கியுள்ளனர். 

இது சந்தையில் கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. அதே வேளையில், காப்பீட்டு நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு நிர்வாகிகளின் (TPA) தலையீடு, சிகிச்சைக் கட்டணக் கட்டுப்பாடு, ஆன்லைன் மருத்துவச் சேவைகளின் ஆதிக்கம் ஆகியவை தனியார் மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் நசுக்கி வருகின்றன.

இந்த நெருக்கடி நிலையைச் சீர்செய்ய, அரசு மருத்துவமனைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க எளிய மருத்துவச் சிகிச்சைகளைத் தனியார் கிளினிக்குகளுக்கு மாற்ற வேண்டும் என மலேசிய மருத்துவச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

நீண்ட காலத்திற்குப் பிறகு ஆலோசனைக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்திருப்பதை வரவேற்றுள்ள அதே வேளையில், தனியார் மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கெனத் தனித்துவமான கொள்கைகளை அரசு வகுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வரும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், நாட்டின் முதன்மைச் சுகாதாரக் கட்டமைப்பின் ஒரு அங்கமான தனியார் கிளினிக்குகள் முற்றாக மூடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

- கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset