நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தை அச்சுறுத்தும் இரட்டை வானிலை ஆபத்து: ஒரே நேரத்தில் வெயிலும் புயலும்

பேங்காக்: 

தாய்லாந்தின் வடக்குப் பகுதிகளில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் தெற்குப் பகுதிகளில் உருவாகியுள்ள வெப்பமண்டலச் சூறாவளி ஆபத்து என, அந்நாடு ஒரே நேரத்தில் இரண்டு விதமான இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் இரட்டை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நேற்று முதல் தாய்லாந்தின் மேல் பகுதியைச் சூழ்ந்துள்ள கடுமையான வெப்ப அழுத்தத்தின் காரணமாக, சியாங் மாய், மே ஹாங் சான் உள்ளிட்ட வடக்குப் பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் வரை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, பொதுமக்கள் வெளியில் நீண்ட நேரம் நடமாடுவதைத் தவிர்க்குமாறும், வெப்பத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வடக்கு மாநிலங்கள் வெயிலில் வாடும் அதே வேளையில், தெற்குப் பகுதிகள் எதிர்வரும் மே 6 முதல் 8-ஆம் தேதி வரை கடுமையான வானிலை மாற்றத்தைச் சந்திக்கவுள்ளன. தெற்கு தீபகற்பப் பகுதியில் வீசவுள்ள கிழக்கு நோக்கிய பலத்த காற்றினால் பல்வேறு இடங்களில் பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகச் சூரத் தானி, புக்கெட், கிராபி ஆகிய பகுதிகளில் பெய்யவிருக்கும் கனமழையால் ஆபத்துகள் ஏற்படக்கூடும் என கடல்சார் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

தாய்லாந்து வளைகுடா, அந்தமான் கடல் பகுதிகளில் அலைகள் ஒரு மீட்டர் உயரத்திற்கு எழும்பக்கூடும் என்றும், இடியுடன் கூடிய மழையின் போது அலைகளின் சீற்றம் இரண்டு மீட்டருக்கும் அதிகமாக உயரக்கூடும் என்பதால், படகோட்டிகள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset