நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சர்வதேச கடற்பகுதியில் அத்துமீறல்: ஆர்வலர்கள் கைதுக்கு ஸ்பெயின் கடும் கண்டனம்

பைத்துல் முகத்திஸ்:

காசா நோக்கிப் பயணித்த உதவிப் படகில் இருந்த இரண்டு மனித உரிமை ஆர்வலர்களை, கிரேக்கக் கடற்பகுதிக்கு வெளியே வைத்து இஸ்ரேல் அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

கைதானவர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சைஃப் அபு கேஷேக், பிரேசில் நாட்டைச் சேர்ந்த தியாகோ அவிலா என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

சர்வதேசக் கடற்பகுதியில் இஸ்ரேல் நடத்தியுள்ள இந்த நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது என்று ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரெஸ் கடுமையாகச் சாடியுள்ளார். 

அபு கேஷேக் உடனடியாக விடுவிக்கப்பட்டு ஸ்பெயினுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இவர்கள் இருவரும் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட அமைப்போடு தொடர்புடையவர்கள் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் இஸ்ரேல் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

அதே வேளையில், கைதான இருவரும் இஸ்ரேலியப் படையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு, தற்போது கண்கள் கட்டப்பட்ட நிலையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக அந்த இரண்டு ஆர்வலர்களும் தற்போது சிறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

கடந்த 2025-ஆம் ஆண்டில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரெட்டா துன்பெர்க் உள்ளிட்ட ஆர்வலர்கள் பயணித்த படகை இஸ்ரேல் வழிமறித்து அனைவரையும் நாடுகடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது இந்த விவகாரம் மீண்டும் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset