நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லண்டனிலிருந்து புத்ராஜெயாவுக்கு வரவழைக்கப்பட்ட ஜேம்ஸ் சாய்: 8 மணி நேர விசாரணையால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

புத்ராஜெயா:

முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லியின் முன்னாள் உதவியாளரும், அரசியல் ஆய்வாளருமான ஜேம்ஸ் சாய் என்பவரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) நேற்று சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தியது.

அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட RM1.11 பில்லியன் ரிங்கிட் (RM1.11 billion) மதிப்பிலான செமிகண்டக்டர் (Semiconductor) திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. லண்டனில் வசித்து வந்த ஜேம்ஸ் சாய், பலமுறை அழைப்பு விடுத்தும் வராத நிலையில், நேற்று காலை 10 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள விசாரணை அலுவலகத்தில் நேரில் முன்னிலையானார்.

முன்னதாக, லண்டனில் பணிபுரிந்து வரும் ஜேம்ஸ் சாய், விமானக் கட்டணம், பணிச்சுமை காரணமாகத் தன்னால் மலேசியா வர இயலாது எனத் தனது வழக்கறிஞர் மூலம் தெரிவித்திருந்தார். 

இருப்பினும், ஊழல் தடுப்பு ஆணையம் அவருக்குத் தொடர்ந்து அவகாசம் வழங்கியதுடன், தேவைப்பட்டால் விமானக் கட்டணத்தை ஏற்பதாகவும், சர்வதேசக் காவல் துறை (Interpol) உதவியுடன் அவரை அழைத்து வர நேரிடும் என்றும் எச்சரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தனது லண்டன் நிறுவனத்திடம் அனுமதி பெற்று அவர் தற்போது விசாரணையில் பங்கெடுத்துள்ளார்.

இந்த மெகா ஊழல் விவகாரம் தொடர்பாக இதுவரை பொருளாதார அமைச்சின் அதிகாரிகள், மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தைச் (MIDA) சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 17 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

நேற்று மாலை 6.30 மணியளவில் விசாரணையை முடித்து வெளியேறிய ஜேம்ஸ் சாய், இன்றைய தினமும் விசாரணைக்காக மீண்டும் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணை மலேசிய அரசியல் வட்டாரத்திலும், பொருளாதாரத் துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கறிஞர் நிறுவனம் மூலம் ஜேம்ஸ் சாய் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset