நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவின் ரயில் விபத்து விவகாரம்: கிரீன் எஸ்.எம் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பெகாசி திமுர் ரயில் நிலையம் அருகே நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்து தொடர்பாக 'கிரீன் எஸ்.எம் இந்தோனேசியா' (Green SM Indonesia) என்ற தனியார் வாடகை வாகன நிறுவனத்திற்கு அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சகம் அவசர அழைப்பாணை விடுத்துள்ளது. 

விபத்து நடந்த நேரத்தில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த வாகனம் ஒன்று தண்டவாளத்தின் குறுக்கே நின்றதே இந்த விபரீதத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திங்கட்கிழமை இரவு, தண்டவாளத்தின் குறுக்கே வாகனம் நின்றதால் ஒரு பயணிகள் ரயில் பாதையிலேயே நிறுத்தப்பட்டது. அப்போது அதே பாதையில் பின்னால் வந்த நெடுந்தூர விரைவு ரயில், நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 85 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் சுமார் 12 மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டதாகத் தேசிய மீட்புப் படைத் தலைவர் முகமது ஷாபி தெரிவித்துள்ளார்.

விபத்திற்குக் காரணமான அந்த வாகனம் 2026-ஆம் ஆண்டு வரை முறையான அனுமதி பெற்றிருந்தாலும், அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாண்மை, விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கச் சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம், நிர்வாகக் கோப்புகள், பாதுகாப்புத் தரநிலைகள் குறித்துத் தீவிர தணிக்கை செய்யப்படும் எனத் தரவழிப் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் ஆன் சுகானா தெரிவித்துள்ளார்.

ரயில்வே கடவைகளில் வாகனங்களை முறையாகக் கையாள்வதில் ஏற்பட்ட அலட்சியத்தால் இவ்வளவு பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் உள்ள இரும்புக் கழிவுகளை அகற்றும் பணிகள் தற்போது பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset