நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்சார செலவு மாற்றங்களின் தாக்கத்தை மக்கள், வணிகங்களுக்குக் குறைந்தபட்சமாக்குவதாக அரசாங்கம் உறுதியளிக்கிறது: அக்மல் நசிர்

கோலாலம்பூர்: 

நாடு தற்போது உலகளாவிய நிச்சயமற்ற எரிபொருள் விலை தன்மையை எதிர்கொண்டிருந்தாலும், மின்சார செலவு மாற்றங்களின் எந்தவொரு தாக்கத்தையும் மக்கள், வணிகத் துறை மீது குறைந்தபட்சமாக்குவதாக அரசாங்கம் உறுதியளிக்கிறது.

வாழ்க்கைச் செலவு உயர்வால் பெரும்பாலான உள்நாட்டு நுகர்வோர் சுமையேற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முஹம்மத் நசிர் கூறினார்.

"இது தொடர்பாக, 600 kWj-க்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் 7.5 மில்லியன் உள்நாட்டு நுகர்வோர் அல்லது நுகர்வோரில் 85 சதவீதத்தினர், தானியங்கி எரிபொருள் சரிப்படுத்தும் கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுவார்கள்" என்று அவர் இன்று உலகளாவிய விநியோக நெருக்கடி குறித்த விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.

உலக நிலக்கரி விலை உயர்வால் பாதிக்கப்பட்டு, மே 2026-க்கான மின்சார உற்பத்திச் செலவு, அடிப்படை விலையான ஒரு மில்லியன் Btu-க்கு 19.14 ரிங்கிட்டிலிருந்து, 21.28  ரிங்கிட்டாக உயரும் என்று கணிக்கப்பட்ட போதிலும், அந்த உறுதியளிப்பு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

விநியோக நிலைத்தன்மை குறித்து கருத்து தெரிவித்த அக்மல் நஸ்ருல்லா, வெப்பமான வானிலையைத் தொடர்ந்து ஏர் கண்டிஷனர்களின் அதிக பயன்பாட்டினால், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி, நாட்டின் அதிகபட்ச மின்சார தேவை 21,468 MW என்ற புதிய சாதனையைப் படைத்ததாகத் தெரிவித்தார்.

"நாட்டின் மின்சார விநியோகம் பாதுகாக்கப்படும், ஆனால் உற்பத்திச் செலவுகள் நியாயமான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டும். ஏனெனில், நாடு இன்னும் உலகளாவிய எரிபொருள் விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகக்கூடியதாக உள்ளது" என்றார் அவர்.

எனவே, ஒட்டுமொத்த உற்பத்திச் செலவுகளை நிலைப்படுத்த உதவும் வகையில் மின்சாரப் பயன்பாட்டை புத்திசாலித்தனமாக நிர்வகிக்குமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்துவதாக அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset