நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உள்நாட்டு வளர்ச்சிக்காகப் பயண வரியை மீண்டும் கொண்டுவரும் தாய்லாந்து

பாங்காக்:

தாய்லாந்து குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் ஏதுவாக, அந்நாட்டு அரசு சுமார் 1,000 பாட் வெளியேறும் கட்டணமாக (Exit Charge) விதிக்க ஆலோசித்து வருகிறது. 

1983-ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த பயண வரி சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அந்நாட்டு சுற்றுலா, விளையாட்டுத்துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் 1,000 கோடி பாட் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது உள்நாட்டுச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களுக்கும், மானியங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் சூரசாக் பஞ்சரோன்வோராகுல் தெரிவித்துள்ளார். 

இந்தக் கட்டணம் தாய்லாந்து குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இது விதிக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

முன்னதாக, தாய்லாந்தில் 500 பாட் பயண வரி நடைமுறையில் இருந்து பின்னர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், இது விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இத்தகைய கூடுதல் கட்டணம் விதிப்பது வெளிநாடு செல்லும் தாய்லாந்து குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக்கூடும் என்றும், இது சர்வதேச விமானப் போக்குவரத்துச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் தாய்லாந்து பயண முகவர்கள் சங்கத்தின் தலைவர் தனபோல் கவலை தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset