நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல்கலைக்கழகங்கள் சான்றிதழ் வழங்கும் தொழிற்சாலைகள் அல்ல: தரத்தை உறுதி செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

கோலாலம்பூர்: 

பல்கலைக்கழகங்களின் தரத்தைக் கண்காணிக்குமாறு உயர்கல்வி அமைச்சைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார். உயர்கல்வி நிறுவனங்கள், தரமற்ற தகுதிகளை உற்பத்தி செய்யும் வெறும் 'சான்றிதழ் தொழிற்சாலைகளாக' மாறக்கூடாது என்று அவர் எச்சரித்தார்.

"உயர்கல்வி அமைச்சு, பல்கலைக்கழகங்களின் தரத்தைக் கண்காணித்துப் பாதுகாக்க வேண்டும். ஒரு பல்கலைக்கழகம் சிறந்த முன்னேற்றத்தை நோக்கி நகரவில்லை என்றால், அது மந்தமாகி, தரமற்ற சான்றிதழ்களை உற்பத்தி செய்யும் ஒரு சான்றிதழ் ஆலையாக மாறும்."

"இது எதிர்கால சந்ததியினரைப் பாதிக்கும். அதனால்தான், எல்லாத் துறைகளிலும் தரத்தை வலியுறுத்துகிறோம்" என்று, யூசிஎஸ்ஐ பல்கலைக்கழகத்தின் புதிய வளாக விரிவாக்கத்தையும் தொடக்கி வைத்து, 'தேமு அன்வார்' நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

ஒரு பிராந்தியக் கல்வி மையமாக மலேசியாவின் நிலை, கல்வித் தரங்களைப் பேணுவதை முக்கியமானதாக ஆக்குவதாக தெரிவித்த அவர் மேலும் தற்போது உள்ளூர் பல்கலைக்கழகங்களில் சுமார் 160,000 சர்வதேச மாணவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி துணை அமைச்சர் ஆடம் அட்லி அப்த் ஹலிம், அன்வரின் மனைவி, பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், மனித மதிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சமநிலையான கல்வி முறையின் அவசியத்தையும் அன்வர் வலியுறுத்தினார்.

பட்டதாரிகள் அறிவாற்றல் மட்டுமல்லாமல், தார்மீக மதிப்புகள், நெறிமுறைகள், குணாதிசயங்களில் தரையிறக்கப்பட்டவர்களாக உருவாக்குவதில் பல்கலைக்கழகங்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றம், மனித மேம்பாடு, மதிப்புகளின் இழப்பில் வரக்கூடாது என்று அன்வர் மேலும் வலியுருத்தினார்.

"அதனால்தான், இந்த யூசிஎஸ்ஐ, பிற பல்கலைக்கழகங்களால் எடுக்கப்பட்ட அணுகுமுறையால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவில் நாம் வானை நோக்கி விரையும் தருவாயில் நமது அடித்தளத்தையும் கைவிடக்கூடாது."

"எனவே, நாம் இரண்டையும் பின்பற்ற வேண்டும். நாட்டின் கல்வி முறையில், புதிய தொழில்நுட்பங்கள், அறிவியல், செயற்கை நுண்ணறிவில் நாம் முன்னேறும் அதே வேளையில், கலை, கலாச்சாரம், இசை, மதிப்பு சார்ந்த பரிசீலனைகளுக்கும் வலுவான முக்கியத்துவத்தை வழங்க வேண்டும்" என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset