நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலைப்பிரதேசங்களில் அதீத மேம்பாட்டுத் திட்டங்கள்: பொருளாதார லாபத்திற்காக இயற்கை அழிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு

பெந்தோங்:

கெந்திங், கேமரன் மலைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுப்பாடற்ற மேம்பாட்டுத் திட்டங்கள், நிலச்சரிவு, பல்லுயிர் பெருக்கத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகச் சூழலியல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கெந்திங் மலைப்பகுதி மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்றும், அங்குள்ள சரிவுகள் 25 டிகிரிக்கும் அதிகமாக இருப்பதால், முறையான பாதுகாப்பு ஆய்வுகள் இன்றித் திட்டங்களை அனுமதிப்பது ஆபத்தானது என 'சஹாபத் ஆலம் மலேசியா' (SAM) தலைவர் மீனா ராமன் தெரிவித்துள்ளார். 

இத்திட்டங்கள் குறித்த சுற்றுச்சூழல், சமூக தாக்க ஆய்வுகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இயற்கை வளப் பாதுகாப்பு அமைப்பான 'பெக்கா' (Peka), மரங்கள் வெட்டப்படுவதையும் காடுகள் அழிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டித் தனது கவலையை வெளியிட்டுள்ளது. 

1993-ஆம் ஆண்டு ஹைலேண்ட் டவர்ஸ் சரிவு, 2013-ஆம் ஆண்டு கேமரன் மலை வெள்ளம், 2022-ஆம் ஆண்டு 31 உயிர்களைப் பலிவாங்கிய நிலச்சரிவு போன்ற வரலாற்றுச் சோகங்களை நினைவூட்டிய அந்த அமைப்பின் தலைவர் ராஜேஷ் நாகராஜன், இவை இயற்கைச் சீற்றங்கள் அல்ல, மாறாகத் தவறான கொள்கை முடிவுகளின் விளைவு என்று சாடினார். 

போதிய தொழில்நுட்ப அறிவு இருந்தும், அதைச் சரியாகச் செயல்படுத்தத் தவறுவது அடுத்தடுத்த விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

இதேபோல், கேமரன் மலைப்பகுதியில் சுற்றுலா, உயர்மாடிக் கட்டிடங்களுக்காக மேற்கொள்ளப்படும் அதீத கட்டுமானத் திட்டங்களைக் குறைக்க வேண்டும் என 'ரீச்' (Reach) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. 

மலைப்பிரதேசங்களை வெறும் பொருளாதார மண்டலங்களாகப் பார்க்காமல், எதிர்கால சந்ததியினருக்கான தேசியப் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இப்பகுதியின் தனித்துவமான குளிர்ந்த காலநிலை மாறிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset