நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விளையாட்டு வினையானது: காற்சட்டைக்குள் புகுந்த பாம்பு கடித்ததில் ஜெர்மனி பயணி பலி

பவாரியா:

எகிப்து நாட்டின் பிரபலமான கடற்கரை சுற்றுலாத் தலமான ஹுர்காதாவில், பாம்பாட்டிக் கண்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 57 வயது சுற்றுலாப் பயணி ஒருவர் பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். 

ஏப்ரல் மாத தொடக்கத்தில் தனது குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்த அவர், அங்குள்ள தங்கு விடுதி ஒன்றில் நடைபெற்ற பாம்பாட்டிக் கண்காட்சியைப் பார்த்துள்ளார். அப்போது, கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பாம்புகள் பார்வையாளர்களின் கழுத்தில் சுற்றப்பட்டதாக ஜெர்மனியின் பவாரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, பாம்பாட்டி ஒரு பாம்பினை அந்த ஜெர்மனி பயணியின் காற்சட்டைக்குள் (Trousers) நுழைய விட்டுள்ளார். எதிர்பாராத விதமாக அந்தப் பாம்பு அவரின் காலில் பலமாகக் கடித்தது. 

இதனால் உடலில் விஷம் பரவியதற்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவருக்குத் தீவிர முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

உயிரிழந்த நபர் பவாரியாவின் 'உன்டெரல்காவ்' (Unterallgau) மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மரணம் தொடர்பாக ஜெர்மனி போலிசாரும் அரசு வழக்கறிஞர்களும் விசாரணையைத் தொடங்கியுள்ளதோடு, நச்சியல் (Toxicology) ஆய்வறிக்கைக்காகக் காத்திருக்கின்றனர். 

அதேவேளையில், இச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset