நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷா ஆலமில் பரபரப்பு: 14 வயதுச் சிறுமி உட்பட 4 சட்டவிரோதக் குடியேறிகள் அதிரடியாக கைது

ஷா ஆலம்:

ஷா ஆலம் பகுதியில் போலிசாரின் சோதனையிலிருந்து தப்பிக்க முயன்ற நான்கு சட்டவிரோதக் குடியேறிகள், அவர்கள் பயணம் செய்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். 

நேற்று காலை சுமார் 9.49 மணியளவில் செக்ஷன் 15 பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார், சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற சாம்பல் நிற 'ஹோண்டா சிட்டி' காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். இருப்பினும், காரைச் செலுத்தியவர் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டிச் சென்றுள்ளார்.

போலிசாரின் எச்சரிக்கையையும் மீறி தப்பியோடிய அந்த வாகனம், செக்ஷன் 18-இல் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஒரு மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. 

இதனைத் தொடர்ந்து காரில் இருந்தவர்களை போலிசார் சோதனையிட்டபோது, அவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த மூன்று ஆண்கள், 14 வயதுடைய ஒரு சிறுமி என்பது தெரியவந்தது. 

கைதான 14 முதல் 41 வயதுக்குட்பட்ட அந்த நான்கு பேரிடமும் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது சிறுநீர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது வீதியில் அஜாக்கிரதையாக வாகனத்தைச் செலுத்துதல், முறையான ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் குறித்து மேலதிகத் தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வு அதிகாரி முஹம்மத் அரிஃப் அவர்களைத் தொடர்புகொள்ளுமாறு ஷா ஆலம் மாவட்ட காவல்துறை துணை ஆணையர் ராம்சே எம்போல் கேட்டுக்கொண்டுள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset