நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புயல், கனமழையால் மாணவர்கள் பாதிப்படையவில்லை: அஷ்ரஃப் வாஜ்தி

கோலாலம்பூர்: 

நேற்று மாலை பெண்டாங், கெடாவில் உள்ள மக்தாப் ரெண்டா சைன்ஸ் மாராவைத் (எம்ஆர்எஸ்எம்) தாக்கிய புயல், கனமழை சம்பவத்தில், மாணவர்கள் யாரும் காயமடைந்ததாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வாஜ்தி துஸூகி, இந்தச் சம்பவம் குறித்த அறிக்கையைத் தாம் பெற்றதாகவும், மாணவர்களின் பாதுகாப்பு, நலன் எப்போதும் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, தொடர்ந்து கண்காணித்து, அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மக்தாப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்தார்.

"தங்குமிடத் தொகுதி, தொழுகை அறை, கல்வித் தொகுதி, சாப்பாட்டு அறை பாதிக்கப்படவில்லை என்றும், அந்தப் பகுதியில் மின்சார விநியோகம் வழக்கம் போல் செயல்படுவதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

"இருப்பினும், நிர்வாகத் தொகுதி, ஆசிரியர் அறை, விரிவுரை மண்டபம், கணினி ஆய்வகம், ஆலோசகர் அறை, கலைக் கல்வி அறை ஆகியவற்றை உள்ளடக்கிய மிகவும் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. மேலும், இந்தத் தொகுதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது" என்று அவர் இன்றிரவு பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.

அதன்படி, மாராவின் மேல்நிலைக் கல்விப் பிரிவு (BPM) இயக்குநருக்கு, மாணவர்கள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு அவசரகால ஒதுக்கீடும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

"மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பும் நலனும் எப்போதும் முன்னுரிமையாகும். நான் அவ்வப்போது முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பேன்" என்றார் அவர்.

இதற்கிடையில், பெண்டாங் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகள் நேற்று மாலைப் புயல் சம்பவத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை, பெண்டாங் அறிவியல் அகாடமி,  ஹாஜி எம்டி அரிஃப் தேசியபள்ளி, பாயா மக் இன்சோன் தேசியபள்ளி, எம்ஆர்எஸ்எம் பெண்டாங் ஆகிய பள்ளிகள் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்த மூலம் தெரிவித்தது.

இதற்கு முன்னர், இரவு 9.30 மணி நிலவரப்படி, பெண்டாங், பண்டார் பாரு, கூபாங் பாசு ஆகிய மூன்று மாவட்டங்கள் புயலால் தாக்கப்பட்டதாக கெடா குடிமைப் பாதுகாப்புப் படை (APM) இன்றிரவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை தொடக்கத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், பல வீடுகள், கட்டிடங்கள், அரசு வளாகங்கள் கூரைப் பகுதிகளில் சேதத்தைச் சந்திக்க காரணமாக இருந்தது. மேலும், பல மரங்கள் விழுந்து பாதைகளைத் தடுத்ததாகவும் தெரிகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset