நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

5 ஆண்டுகளாக அறையில் பூட்டி வைக்கப்பட்ட 191 சடலங்கள்; தம்பதிக்கு 60 ஆண்டுகள் சிறை

டென்வர்:

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 'இயற்கைக்குத் திரும்பு' (Return to Nature) என்ற பெயரில் இறுதிச்சடங்கு சேவை மையத்தை நடத்தி வந்த ஜான், கேரி ஹால்ஃபோர்ட் தம்பதியினர், 191 சடலங்களை முறையாக அடக்கம் செய்யாமல் பாழடைந்த கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த கொடூரம் அம்பலமாகியுள்ளது. 

இறந்தவர்களின் உறவினர்களிடம் அவர்கள் அன்புக்குரியவர்களின் சாம்பல் எனக் கூறி, சிமெண்ட் தூளைக் கொடுத்து ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்குற்றத்திற்காக ஜானுக்கு 60 ஆண்டுகளும், கேரிக்கு 18 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில், இவர்களது கட்டிடத்திலிருந்து வீசிய துர்நாற்றம் குறித்து வந்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை அங்கு சோதனையிட்டது. 

அப்போது சுமார் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத்தின் 12 அறைகளிலும், பெரியவர்கள், குழந்தைகள் என மொத்தம் 189 சடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. 

அந்த இடத்தில் குளிர்சாதன வசதி இல்லாததால் சடலங்கள் அழுகி, புழுக்கள் மொய்த்துக் கொண்டிருந்த காட்சி அதிகாரிகளையே நிலைகுலைய வைத்தது.

இந்தத் தம்பதியினர் ஒரு உடலைத் தகனம் செய்ய சுமார் 1,200 டாலர் வரை கட்டணமாகப் பெற்றுள்ளனர். ஆனால், அந்தப் பணத்தை வைத்து சொகுசு கார்கள் வாங்குவதற்கும், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கும் பயன்படுத்தியுள்ளனர். 

சிசிடிவி கேமரா காட்சிகளின்படி, ஜான் நள்ளிரவில் புதிய சடலங்களைக் கொண்டு வருவதற்காக ஏற்கனவே இருந்த பழைய சடலங்களைத் தரையில் வீசியெறிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சில உறவினர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சாம்பல் வழக்கத்திற்கு மாறாகக் கனமாக இருந்ததைக் கண்டு ஏற்கனவே சந்தேகம் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தினால் சிறையிலிருந்தபடியே இந்தத் தம்பதியினர் விவாகரத்து செய்துகொண்டனர். தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட ஜான், இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, கொலராடோ மாகாணத்தில் இறுதிச்சடங்கு மேலாளர்களுக்குக் கட்டாயம் உரிமம் தேவை என்ற புதிய சட்டம் 2024 மே மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset