நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: வணிக நேரக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

இஸ்தான்புல்:

அமெரிக்க, இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதலால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, எகிப்து அரசு கடந்த ஒரு மாதமாக வணிக வளாகங்கள், உணவகங்களுக்கு நேரக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 

தற்போது இந்த அவசரக்கால நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, அனைத்து வணிக நிறுவனங்களும் மீண்டும் தங்களின் வழக்கமான நேரப்படி இயங்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலகளாவிய எரிசக்தி விலை உயர்வு, இறக்குமதிச் செலவுகளைக் கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாத இறுதியில் கடைகள், உணவகங்களை இரவு 11 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டது. 

பிரதமர் முஸ்தபா மட்பௌலி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், தற்போதைய பொருளாதாரச் சூழல், போரினால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட பின்னரே இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவை அமைச்சரவைப் பேச்சாளர் முஹம்மத் எல்-ஹோம்சானி உறுதிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, சுற்றுலாத் துறை  தனியார் துறையினரின் கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இருப்பினும், ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்தே பணியாற்றுதல் போன்ற சில அடிப்படை மின்சேமிப்பு நடவடிக்கைகள் மட்டும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க நெடுஞ்சாலை விளம்பரப் பலகைகளை அணைத்தல், பொது இடங்களில் மின்விளக்குகளைக் குறைத்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

தற்போது கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், தேசத்தின் பொருளாதார நலன் கருதி எரிசக்திப் பயன்பாட்டில் விழிப்புணர்வுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset