நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுகாதார அமைச்சின் புதிய இலக்கு: 2030-க்குள் 3D தொழில்நுட்பத்தில் பல் செட் திட்டம்

கோலா சிலாங்கூர்: 

வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான முதியவர்கள் குறைந்தபட்சம் 20 இயற்கை பற்களைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய மலேசிய சுகாதார அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது. 

'தேசிய வாய் சுகாதார வியூகத் திட்டம் 2022-2030'-இன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கெஃப்லி அஹ்மத் தெரிவித்தார். 2020-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, 34.3% முதியவர்கள் மட்டுமே 20 பற்களைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவிலான 'புன்னகைப் பயணம்' (Kembara Senyuman) திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர், வாய் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் நுழைவாயில் என்று குறிப்பிட்டார். 

வாய் ஆரோக்கியம் சரியாக இல்லாவிட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு வாழ்க்கைத் தரத்தையும் குறைக்கும் என்பதால், முதியோர்களிடையே பல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அமைச்சு முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்த இலக்கை அடைய, நாடு முழுவதும் 'புன்னகைப் பயணம்' என்ற பெயரில் நடமாடும் மருத்துவச் சேவைகள் கொண்டு செல்லப்படும்.

இத்திட்டத்தின் மூலம், தொலைதூரக் கிராமங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு மையங்களில் உள்ள மக்களுக்கு நேரடியாகச் செயற்கைப் பற்கள் (Gigi Palsu) செய்து தரப்படும். 

இதற்காக ‘3DDT’ என்ற நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மிக வேகமாகவும் தரமாகவும் செயற்கைப் பற்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் 65 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2025-இல் 8 விழுக்காட்டை எட்டியுள்ள நிலையில், முதியோர் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், உள்நாட்டுக் கிராமங்களில் வசிப்போர் என எவரும் விடுபடாமல், அனைவருக்கும் உயர்தர பல் மருத்துவச் சேவை கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset