நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவும் புருணையும் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு உறவை தொடர்ந்து வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன

கோலாலம்பூர்:

பிராந்திய, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் பரஸ்பர நம்பிக்கை, உடன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்களுக்கிடையிலான சிறப்பு உறவை தொடர்ந்து வலுப்படுத்த மலேசியாவும் புருணையும் உறுதிபூண்டுள்ளன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் புருணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியாவை நேற்று தலைநகரில் சுல்தானைச் சந்தித்தபோது, இந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

மலேசியாவிற்கும் புருணைக்கும் இடையிலான உறவு என்பது வெறும் இராஜதந்திரம் மட்டுமல்ல, மாறாக வரலாற்றில் வேரூன்றிய ஒரு சகோதர உறவு என்று பிரதமர் கூறினார்.

"இந்த உறவு, இரு நாடுகளின் மக்களின் நல்வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டினால் வலுப்படுத்தப்படுகிறது.

"மிகவும் அமைதியான, நிலையான, வளமான எதிர்காலத்திற்காக, இந்த உறவுகள் தொடர்ந்து செழித்து பாதுகாக்கப்படட்டும்" என்று அவர் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

அந்த இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில், பிங்கிரான் மூடா 'அப்துல் மதீன் போல்கியாவும் உடனிருந்தார்.

பிப்ரவரி 23, 1984 அன்று, பிரிட்டனிடமிருந்து புரூணை சுதந்திரம் அடைந்தபோது, மலேசியாவும் புருணையும் இடையிலான இராஜதந்திர உறவுகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.

பல ஒற்றுமைகளைக் கொண்ட அண்டை நாடுகளாக, புருணையுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும்.

பொருளாதார ரீதியாக, 2024 ஆம் ஆண்டில் ஆசியானில் புரூணை மலேசியாவின் ஆறாவது பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது. மொத்த வர்த்தக மதிப்பு 7.53 பில்லியன் ரிங்கிட் (AS$1.77 பில்லியன்) ஆகும்.

ஜனவரி முதல் ஜூன் 2025 வரையிலான காலப்பகுதியில், மலேசியா-புருணை வர்த்தக மதிப்பு AS$690 மில்லியனாக (3.02 பில்லியன் ரிங்கிட்) இருந்தது. ஏற்றுமதி மதிப்பு AS$500 மில்லியனாக (2.18 பில்லியன் ரிங்கிட்) இருந்தது. இறக்குமதி மதிப்பு AS$190 மில்லியனாக (840 மில்லியன் ரிங்கிட்) இருந்தது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset