நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டத்தை மீறும் முதலாளிகளுக்குச் சாட்டையடி: 45 சட்டவிரோதத் தொழிலாளர்கள் அதிரடியாகக் கைது

கோலாலம்பூர்: 

மலேசியக் குடிநுழைவுத் துறை, சட்டவிரோதக் குடியேறிகளைப் பணியமர்த்தும் பிடிவாதமான முதலாளிகளைக் குறிவைத்து சிலாங்கூர் மாநிலத்தின் எட்டு இடங்களில் நேற்று அதிரடிச் சோதனைகளை நடத்தியது. 

ஜெஞ்சாரோம், ஸ்ரீ கெம்பாங்கான், செர்டாங், செராஸ் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், தகுந்த ஆவணங்களின்றிப் பணியாற்றிய 45 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களின் புகார்கள், இரண்டு வார கால உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

52 அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் மொத்தம் 88 நபர்களைச் சோதனையிட்டனர். அதில் வங்காளதேசம், மியான்மர், இந்தியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 முதல் 50 வயதுடைய 45 நபர்கள் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தச் சோதனையின்போது, சட்டவிரோதக் குடியேறிகளுக்கு வேலை வழங்கிய ஒன்பது உள்ளூர் முதலாளிகளுக்கும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு சம்மான் வழங்கப்பட்டது. 

அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மதிக்காமல், சட்டவிரோதத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் அல்லது அவர்களுக்குப் புகலிடம் அளிக்கும் தரப்பினர் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset