நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்

கூச்சிங்:

சபா மாநிலத்தின் ரானாவ் மாவட்டத்திலுள்ள குண்டசாங் பகுதியில், இன்று அதிகாலை 3.02 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.4 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, இன்று காலை 6.35 மணி முதல் தீயணைப்பு, மீட்புத் துறையினர் ரானாவ் நகரப்பகுதிகளில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 

அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கட்டடங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பதும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சூழல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்துள்ள தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

எனினும், நில அதிர்வால் பலவீனமடைந்ததாகக் கருதப்படும் கட்டடங்களுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்புத் துறையினரின் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏதேனும் கட்டடச் சேதங்கள் கண்டறியப்பட்டால், உடனடியாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset