நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சண்டாக்கான் மிதக்கும் வீடுகளில் கோரத்தீ: 9,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

சண்டாக்கான்: 

இன்று அதிகாலையில் கம்போங் பஹாகியாவில் உள்ள கடல்மேல் கட்டப்பட்ட வீடுகளில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 9,007 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 1.30 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த புகாரைத் தாம் பெற்றதாகவும், அதற்குப் பின்னர், அதிகாலை 4 மணிக்கு அந்தப் பகுதி பேரிடர் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாகவும் சண்டாக்கான் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் ஜார்ஜ் அப்துல் ரக்மான் தெரிவித்தார்.

"இந்தப் பகுதியில் தோராயமாக 1,200 வீடுகள் உள்ளன. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1,000 வீடுகளை உள்ளடக்கியது, இதில் 9,007 பேர் அடங்குவர்" என்று இன்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.

இடமாற்றம், உதவி விநியோகத்தின் நோக்கத்திற்காக, பாதிக்கப்பட்டவர்களைப் பதிவு செய்வதை ஒருங்கிணைப்பதில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக ஜார்ஜ் தெரிவித்தார்.

மேலும், அந்தத் தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறும் சமூக ஊடகங்களில் வைரலாகும் கூற்றுக்களையும் அவர் மறுத்துள்ளார்.

"இதுவரை, நான் எந்த உயிரிழப்பு குறித்த புகாரையும் பெறவில்லை என்பதை வலியுறுத்துகிறேன்.

"பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் உடைமைகளைக் காப்பாற்றும் போது அல்லது மற்றவர்களுக்கு உதவும் போது காயங்கள் ஏற்பட்டிருக்கலாம்," என்றார் அவர்.

பேரிடர் மேலாண்மையை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையானது சம்பவ தளபதியாக மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையும் மலேசிய குடிமைப் பாதுகாப்புப் படையும் உள்ளிட்ட பிற நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதாக ஜார்ஜ் கூறினார்.

தீ விபத்தின் உண்மையான காரணம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset