நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சேற்று வெள்ளத்தைத் தொடர்ந்து புக்கிட் கியாரா திட்டத்தின் பணிகளை நிறுத்துமாறு டி.பி.கே.எல். உத்தரவிட்டுள்ளது

கோலாலம்பூர்: 

நேற்று ஜாலான் அபாங் ஹாஜி ஒப்பெங்கில் ஏற்பட்ட சேற்று வெள்ளச் சம்பவத்தைத் தொடர்ந்து, புக்கிட் கியாரா கூட்டரசுப் பூங்காவின் நிர்வாக மண்டலத்தில் உள்ள திட்டத்தின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கோலாலம்பூர் மாநகராட்சி (டி.பி.கே.எல்.) உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், தீயணைப்பு, மீட்புத் துறையுடன் (ஜே.பி.பி.எம்.) இணைந்து டி.பி.கே.எல். தற்போது சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோஹ் தெரிவித்தார்.

அந்தத் திட்டம், வீட்டுவசதி, உள்ளாட்சி அமைச்சின் (கே.பி.கே.டி.) கீழ் உள்ள தேசிய நிலப்பரப்புத் துறையின் (ஜே.எல்.என்) கீழ் இருப்பதாகவும், பொதுப்பணித் துறையின் (ஜே.கே.ஆர்.) கீழ் அமல்படுத்தப்பட்டதாகவும் அவர் விளக்கினார். 

"நான் இன்றிரவு கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ டிபிஆர் ஃபட்லூன் மக் உஜூடுடன் சம்பவ இடத்திற்குச் சென்றேன். அவசர சூழ்நிலை, அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்பைப் பாதிக்கும் அபாயம் காரணமாக, டி.பி.கே.எல். உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது" என்று அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.

ஜே.பி.பி.எம்., டி.பி.கே.எல்.-ஆல் ஒப்பந்ததாரருடன் இணைந்து மேற்கொள்ளப்படும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தடுப்புக் கட்டமைப்புகளைத் திறப்பது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

மேற்பரப்பு நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வண்டல் பொறிகளை சரிசெய்யும் பணியும், சம்பவ இடத்தில் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக டி.பி.கே.எல்.-ஆல் ஒரு கட்டுப்பாட்டு மையத்தை நிறுவுவதும் அந்தப் பணியில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, குறைப்புத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு ஒப்பந்ததாரர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரும் அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மேயர் உத்தரவிட்டுள்ளதாக ஹன்னா மேலும் கூறினார்.

சரிவுப் பகுதிகளில் நில மேம்பாட்டுப் பணிகளின் ஒழுங்குமுறையை டி.பி.கே.எல். வலுப்படுத்தும் என்றும், மேலும் அவை கட்டுப்பாடின்றி முழுமையாகச் செயல்படுத்த அனுமதிக்கப்படாது என்றும், மாறாக அவை கட்டமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஹன்னா தெரிவித்தார்.

இதற்கிடையில், பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி, அந்தப் பகுதியின் அருகிலுள்ள ஒரு தடுப்புச் சுவர் இடிந்து விழுவதற்கும் காரணமான வெள்ளச் சம்பவத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்காக, விரிவான தொழில்நுட்ப விசாரணையை நடத்துமாறு ஜே.கே.ஆர்.-க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset